தூத்துக்குடியில் திட்டமிட்டு துப்பாக்கிச் சூடு- அதிகாரிகள் ஆள்மாறாட்டம்: ஸ்டாலின் குற்றச்சாட்டு
தூத்துக்குடியில் போராட்டக்காரர்களை திட்டமிட்டு குறிவைத்து சுட்டு இருக்கிறார்கள் என்று ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார்.
சென்னை : தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில், போராட்டக்காரர்களை குறிவைத்து திட்டமிட்டு சுட்டுக்கொன்று விட்டு, அதிகாரிகளை ஆள்மாறாட்டம் செய்து இருக்கிறார்கள் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியான விவகாரம் குறித்து, சட்டசபையில் பேச அனுமதி மறுக்கப்பட்டதால் திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

அப்போது திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் போராட்டக்காரர்களை திட்டமிட்டு அடையாளம் கண்டு குறிவைத்து போலீஸார் சுட்டுக் கொன்று இருக்கிறார்கள்.
தனியார் நிறுவனமாக ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக முதல்வர், காவல்துறை டிஜிபி, அதிகாரிகள் துணைபோய் இருப்பதாலேயே, துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. அதை மறைப்பதற்காகவே கண் துடைப்புகாக விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச்சூட்டுக்கு உத்தரவிட்ட அதிகாரிகளைக் காப்பாற்றுவதற்காக ஆள்மாறட்டம் நடைபெற்று இருக்கிறது. எனவே, இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் . எங்களிடம் இருக்கும் ஆதாரங்களைக் கொண்டு நாங்கள் நிச்சயம் நீதிமன்றத்தை நாடுவோம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications