தூத்துக்குடியில் வீடுகளைச் சூழ்ந்த வெள்ளம்... படகுகள் மூலம் மக்கள் மீட்பு
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையால் வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் சிக்கிய மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் மழை நீர் வெள்ளமாக குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளது.
அந்தவகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கடம்பூர், மணியாச்சி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை காரணமாக உருவான காட்டாற்று வெள்ளம் புதுக்கோட்டை வழியாக தூத்துக்குடி கோரம்பள்ளம் குளத்திற்கு வந்தது.

இதனால் அந்த குளத்தில் 15 மதகுகள் திறக்கப்பட்டு, உப்பாற்று ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அங்கு வினாடிக்கு சுமார் 4 ஆயிரம் கன அடி நீர் பாய்கிறது. வெள்ளநீர் அத்திமரப்பட்டி, பொட்டல்காடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 700 வீடுகளை சூழ்ந்துள்ளது.
உடனடியாக அப்பகுதியில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு திருமண மண்டபம், சர்ச் மற்றும் கோயில்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர்.
இதேபோல், முள்ளக்காடு, முத்தையாபுரம் குடியிருப்பு பகுதிகளில் சுமார் 4 அடிக்கு மேல் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், ரப்பர் படகுகள் மூலம் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.












Click it and Unblock the Notifications