தாழ்வாக சென்ற மின் வயர் மீது விழுந்த பள்ளி மாணவன் பலி.. கொடுக்காப்புள்ளி பறித்த போது பரிதாபம்
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே தாழ்வாக சென்ற மின் வயரில் பட்டு பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகளின் அலட்சியமே இந்த சோக சம்பவத்திற்கு காரணம் என அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் குளத்தூரை சேர்நதவர் கஜேந்திரன். பெட்டி கடை நடத்தி வருகிறார். இவருக்கு மகன்கள் உத்திரகுமார், சண்முகவேல், மகள் பிருந்தா லெட்சுமி ஆகியோர் உள்ளனர். சண்முகவேல் அங்குள்ள தொடக்க பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தான்.
அவனது பள்ளி கட்டிடத்தின் அருகே கொடுக்காபுள்ளி மரம் உள்ளது. மாணவர்கள் பள்ளி கட்டிட மொட்டை மாடியில் ஏறி மரத்திலிருந்து கொடுக்காபுளி பறிப்பது வழக்கம். பள்ளியின் மேல் உயர் அழுத்த மின் கம்பிகள் செல்லும் நிலையில் மாணவர்கள் ஆபத்தை அறியாமல் தினமும் சென்று வந்துள்ளனர்.
பள்ளியின் சாவியை தலைமை ஆசிரியை அந்தோணி சின்னம்மாள் சண்முகவேலிடம் கொடுத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பள்ளியில் ஆசிரியர் கூட்டம் நடைபெறுவதாக இருந்ததால் பள்ளியைத் திறக்கச் சென்றுள்ளான் சண்முகவேல். அப்போது அவனது நண்பர்கள் வழக்கம் போல் கொடுக்காபுளி பறிக்க கூப்பிட்டுள்ளனர்.
இதையடுத்து சண்முக வேல், நண்பர்களுடன் பள்ளி கட்டிடத்தில் ஏறி கொடுக்காபுளி பறித்துள்ளான். இதனை அங்கு கூட்டத்திற்கு வந்த ஆசிரியர்கள் கவனித்து கீழே இறங்குமாறு மாணவர்களை எச்சரித்துள்ளனர். இதனால் மாணவர்கள் மின் வயரை தாண்டி கீழே குதித்துள்ளனர்.
அப்போது சண்முகவேல் நிலை தடுமாறு மின்வயரில் விழுந்தான். இதில் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட அவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து அவனது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து பல முறை எடுத்து கூறியும் அலட்சியம் காட்டிய மின் வாரியத்தை கண்டித்து அங்கு பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.