குற்றம் நடந்த 2 மாதங்களில் தீர்ப்பு.. தமிழகத்தை உலுக்கிய விளாத்திகுளம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு.. டைம் லைன்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வேடநத்தம் பள்ளி மாணவி கொலை வழக்கில், முக்கியக் குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு தூக்கு தண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் இன்று (மே 25) தீர்ப்பளித்துள்ளது. தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தில் நீதிபதி பிரீத்தா இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளார்.
ராமநாதபுரம் சாயல்குடியைச் சேர்ந்த 37 வயது தர்ம முனீஸ்வரனை மார்ச் 19 அன்று கைது செய்தனர். விசாரணையில் இவரே கொலையாளி என்பது உறுதியானது. இவ்வழக்கு தூத்துக்குடியில் அமைந்துள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. குற்றம் நடந்து இரண்டே மாதங்களில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. விளாத்திகுளம் சிறுமி பாலியல் வழக்கு கடந்து வந்த பாதையினை இங்கு காணலாம்.

12 ஆம் வகுப்பு மாணவி
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் குளத்தூர் அருகே உள்ள வேடநத்தத்தைச் சேர்ந்த, 17 வயது 12ஆம் வகுப்பு பள்ளி மாணவி கடந்த மார்ச் 10 அன்று இரவு இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றார். ஆனால் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. எங்கு தேடியும் காணவில்லை. இதனால் மறுநாள், மார்ச் 11ஆம் தேதி, மாணவியின் பெற்றோர் மீண்டும் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குச் சென்றனர்.
ஆனால், அங்கிருந்த இன்ஸ்பெக்டர் பிரவீனா புகாரைப் பெறாமல் பல மணி நேரம் இழுத்தடித்ததோடு, அவர்களை மீண்டும் குளத்தூர் காவல் நிலையத்திற்கே திருப்பி அனுப்பினார். இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அன்றே மார்ச் 11ஆம் தேதி நண்பகல் நேரத்தில், குளத்தூர் காவல் நிலையத்திற்குப் பெற்றோர் திரும்பியபோது, காணாமல் போன மாணவி அதே காட்டுப் பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, காயங்களுடன் சடலமாகக் கிடப்பது கண்டறியப்பட்டது.
சாலை மறியல் போராட்டம்
தகவலறிந்த போலீசார், சடலத்தை மீட்டெடுத்து தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொடூர கொலைச் சம்பவம் வேடநத்தம் கிராம மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்யக் கோரி, தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலை மற்றும் தூத்துக்குடி - ராமேஸ்வரம் மாநில நெடுஞ்சாலையில் தொடர்ந்து 12 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
இதனையடுத்து, புகாரைப் பெறாமல் அலட்சியமாகச் செயல்பட்ட இன்ஸ்பெக்டர் பிரவீனா, மார்ச் 12ஆம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அப்போதைய தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மதன், "சம்பந்தப்பட்ட குற்றவாளியை விரைவில் கைது செய்வோம்" என்று உறுதியளித்தார். இருப்பினும், குற்றவாளியைக் கைது செய்யும்வரை மாணவியின் உடலை வாங்க மாட்டோம் என அவரது குடும்பத்தினர் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். இதனால், மாணவியின் சடலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.
5 நாட்களாக எவ்வித துப்பும் கிடைக்கவில்லை
இதற்கிடையில் பல்வேறு அரசியல் தலைவர்கள் உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். நெல்லை சரக டிஐஜி, தூத்துக்குடி எஸ்.பி., கூடுதல் எஸ்.பி.க்கள், டி.எஸ்.பி.க்கள் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட தனிப்படைகள் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டன. எனினும், சம்பவம் நடைபெற்று 5 நாட்கள் ஆகியும் எந்தவித துப்பும் கிடைக்காமல் போலீசார் திணறினர். தொடர்ந்து போலீசார் சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
சிசிடிவி கேமிரா காட்சி மூலம் சிக்கினார்
இதில், அப்பகுதியில் உள்ள காற்றாலை கோபுர சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்பவர் சிக்கினார். போலீசார் மார்ச் 19ஆம் தேதி தூத்துக்குடியில் வைத்து அவரைக் கைது செய்தனர். குளத்தூர் காவல் நிலையத்தில் தர்ம முனீஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மார்ச் 20ஆம் தேதி காலை, பலத்த பாதுகாப்புடன் தர்ம முனீஸ்வரனை வேடநத்தம் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்ற போலீசார், சம்பவத்தை நடித்துக் காண்பிக்கச் சொல்லி அதை வீடியோவாகப் பதிவு செய்தனர். குற்றவாளி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மார்ச் 20ஆம் தேதி, மாணவியின் குடும்பத்தினர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இருந்து 10 நாட்களுக்குப் பிறகு சடலத்தைப் பெற்று தகனம் செய்தனர். அன்று இரவே, தர்ம முனீஸ்வரன் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இன்று வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு
இந்த வழக்கு தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்றது. போலீசார் விரைந்து செயல்பட்டு குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர். மே 5ஆம் தேதி விசாரணைக்கு வந்த வழக்கில், தர்ம முனீஸ்வரன் பலத்த பாதுகாப்புடன் மூன்று முறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக பல்வேறு சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. கடந்த மே 21ஆம் தேதி அனைத்து விசாரணை நடைமுறைகளும் நிறைவடைந்தன. இதைத் தொடர்ந்து, மே 25ஆம் தேதி திங்கட்கிழமையான இன்று, தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி பிரீத்தா, தர்ம முனீஸ்வரனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை அளித்தார்.
மூதாட்டியை வன்கொடுமை செய்த தர்ம முனீஸ்வரன்
விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று காலை நீதிபதி பிரீத்தா, தர்ம முனீஸ்வரனை குற்றவாளி என அறிவித்து, அவருக்கு இரட்டை தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டார். தர்ம முனீஸ்வரனுக்கு ஏற்கெனவே ஆயுள் தண்டனை உள்ளது. 2020 பிப்ரவரி 2 அன்று, எட்டயபுரம் அருகே 65 வயது மூதாட்டி பாப்பாவை கொலை செய்து, பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.
பின்னர் உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்ற தர்ம முனீஸ்வரன், கடந்த ஆண்டு டிசம்பர் 24 முதல் தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு வந்தார். சாயல்குடியிலிருந்து இதற்காக வேடநத்தம் வழியாகச் சென்றபோதே, அப்பள்ளி மாணவியை கொலை, பாலியல் வன்கொடுமை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.















Click it and Unblock the Notifications