படப்பிடிப்புக்காக அகற்றப்பட்ட தடுப்பு: செங்குன்றம் பாலத்தில் இருந்து கார் விழுந்து மூன்று பேர் பலி
செங்குன்றம் அருகே பாலத்தில் இருந்து கார் விழுந்ததில் மூன்று பேர் பலியாகி உள்ளனர்.
செங்குன்றம் : சென்னையை அடுத்த செங்குன்றம் அருகே பாலத்தில் இருந்து கார் விழுந்து மூன்று பேர் பலியாகி உள்ளனர். படப்பிடிப்புக்காக வைக்கப்பட்ட தடுப்புகள் அகற்றாததே விபத்திற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் கொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி நவநீதம், மகள் பவித்ரா. இவரது கணவர் அய்யப்பன் காஞ்சீபுரம் மாவட்ட காங்கிரஸ் எஸ்.சி - எஸ்.டி. பிரிவு தலைவராக உள்ளார். இவர்கள் ஐந்து பேரும் நேற்று உறவினர் ஒருவரின் திருமண நிச்சயதார்த்த விழாவிற்காக காரில் மீஞ்சூர் சென்றனர்.
காரை ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த கந்தவேல் என்பவர் ஓட்டிவந்துள்ளார். மீஞ்சூரில் நிச்சயதார்த்த விழாவினை முடித்துவிட்டு, இரவு 9 மணியளவில் காஞ்சிபுரம் புறப்பட்டனர். பழனியும், நவநீதமும் தூங்கிக்கொண்டிருந்தனர்.
கார் மீஞ்சூர் - வண்டலூர் வெளிவட்ட சாலையில் கார் வந்துகொண்டிருந்த போது, செங்குன்றம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே மேம்பாலம் கட்டி முடிக்கப்படாமல் இருந்தது தெரியாமல் காரை ஓட்டுநர் கந்தவேல் பாலத்தின் மேல் இயக்கி உள்ளார்.
இதனால் வேகமாக வந்த கார் சினிமாவில் வருவது போல, பாலத்தில் இருந்து பாய்ந்து கீழே சாலைப்பணிக்காக தோண்டப்பட்டு இருந்த பள்ளத்தில் விழுந்தது. கடந்த சில நாட்களாக பெய்திருந்த மழையால் பள்ளத்தில் நீர் நிரம்பி இருந்ததால், கார் நீரில் மூழ்கியது. இந்த விபத்தில் காரில் இருந்த பழனி, நவநீதம், பவித்ரா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சாலையில் சென்றவர்கள் சோழவரம் போலீஸிற்கு தகவல் கொடுத்தனர். காரில் பலத்த காயமடைந்து இருந்த அய்யப்பன், கந்தவேல் ஆகியோர மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், சில நாட்களுக்கு முன்பு அந்தப் பாலத்தில் சினிமா படப்பிடிப்பு நடைபெற்றதாகவும், படப்பிடிப்பு முடித்த பின்பு தடுப்புகளை உரிய இடத்தில் வைக்காமல் சென்றதே விபத்திற்கு காரணம் என்றும் தெரியவந்துள்ளது.