சென்னை: கேஸ் சிலிண்டரை திருட்டுத்தனமாக நிரப்பியபோது விபத்து- 3 பேர் காயம்
சென்னை: சென்னையில் சமையல் கேஸை திருட்டுத்தனமாக ஒரு சிலிண்டரில் இருந்து மற்றொரு சிலிண்டருக்கு மாற்றிய போது ஏற்பட விபத்தில் 3 பேர் உடல் கருகி, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த அருண், நரேந்திரபால், பன்சால் என்பவர்கள் 3 பேரும் சென்னை பழவந்தாங்கல் டி.வி.நகர் 13-வது தெருவில் உள்ள வாடகை வீட்டில் தங்கி அப்பகுதியில் தள்ளு வண்டியில் பானிபூரி வியாபாரம் செய்து வந்தனர்.
சமையல் கியாஸ் சிலிண்டரை வணிகக் காரணங்களுக்குப் பயன் படுத்தத் தடை உள்ளதால், அதிகாரிகளை ஏமாற்றும் விதமாக தள்ளுவண்டியில் பயன்படுத்தும் சிலிண்டரில் திருட்டுத்தனமாக வீட்டில் வைத்து சமையல் சிலிண்டரிலிருந்து கியாசை மாற்றி வந்துள்ளனர். இதற்காக அவர்கள் விசேச கருவி ஒன்றைப் பயன் படுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை வழக்கம் போல் கியாசை ஒரு சிலிண்டரில் இருந்து மற்றொரு சிலிண்டருக்கு அவர்கள் மாற்றியுள்ளனர். அப்போது ஏற்பட்ட கியாஸ் கசிவால் எதிர்பாராத விதமாக சிலிண்டர் பலத்த சத்தத்துடன் வெடித்துள்ளது.
இதில், அருண், நரேந்திரபால், பன்சால் ஆகிய மூவர் மீதும் தீ பற்றியது. பலத்த தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய அவர்களை அக்கம்பக்கத்தார் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.
தகவல் அறிந்ததும் கிண்டி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். பழவந்தாங்கல் இன்ஸ் பெக்டர் முத்துராசா மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கியாசை மாற்ற பயன்படுத்திய கருவி, கியாஸ் சிலிண்டர்களை கைப்பற்றினர்.
சிலிண்டர் வெடித்ததில் வீட்டின் கதவு, ஜன்னல் பெயர்ந்து தனியாக விழுந்தது. படுக்கை மெத்தையும் எரிந்து நாசமாயின. சிலிண்டர் வெடித்த வீட்டில் கியாசுடன் மேலும் 4 சிலிண்டர்கள் இருந்தபோதும், அதிர்ஷ்டவசமாக அவை தீயில் வெடிக்கவில்லை. இல்லையெனில் அருகில் உள்ள மற்ற வீடுகளுக்கும் பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும்.












Click it and Unblock the Notifications