சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 3 நீதிபதிகள் நியமனம்: விரைவில் பதவியேற்பு
சென்னை: ஆந்திர, அலகாபாத், டெல்லி உயர்நீதிமன்றங்களில் பணிபுரிந்து வந்த 3 நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் வருகிற 15-ந் தேதிக்குள் பதவி ஏற்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் 75 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. தற்போது 34 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். இதையடுத்து இந்த காலிப்பணியிடங்களை நிரப்ப தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து 6 புதிய நீதிபதிகள் தேர்வுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் வழங்கினார். இவர்கள் விரைவில் பதவி ஏற்க உள்ளனர்.
இந்த நிலையில், ஆந்திரா, அலகாபாத், டெல்லி உயர்நீதிமன்றங்களில் பணிபுரிந்து வந்த 3 நீதிபதிகளை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்ய உச்சநீதிமன்றம் முடிவு செய்தது. இந்த முடிவினை ஏற்று, மத்திய சட்டத்துறை அமைச்சகம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையடுத்து கர்நாடகாவை சேர்ந்த ஹூலுவாதி ரமேஷ் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுலுக்கு அடுத்தப்படியாக 2-வது மூத்த நீதிபதியாக பதவி வகிப்பார்.
அதேபோல் ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தில் இருந்து நீதிபதி நூட்டி.ராமமோகனராவ் மற்றும் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த ராஜிவ் சக்தேர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் நிறுவனங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிப்பார் எனவும் ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 3 புதிய நீதிபதிகளும், வருகிற 15-ந் தேதிக்குள் பதவி ஏற்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால், விரைவில் இவர்களது பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறும் என்று கூறப்படுகிறது.