திருச்சி காவிரி ஆற்றில் குளித்த 3 பேர் பலி.. போலீசார் எச்சரித்தும் ஆற்றில் இறங்கியதால் விபரீதம்
காவிரி ஆற்றில் குளித்த 3 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.
திருச்சி: காவிரி ஆற்றில் குளிக்க வேண்டாம் என போலீசார் எச்சரித்திருந்தும், அதனை ஒரு பொருட்டாக மதிக்காமல் ஆற்றினுள் இறங்கி குளித்த 3 இளைஞர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.
மேட்டூர் அணை கடந்த 19-ம் தேதி திறந்து விடப்பட்டது. இதனால் காவிரி ஆறு பாயும் மாவட்டங்களில் வெள்ளம் கட்டுக்கடங்காமல் ஓடுவதால் பாதுகாப்பு கருதி யாரும் ஆற்றினில் இறங்கி வேண்டாம் என அந்தந்த மாவட்டங்களில் காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் வேண்டுகோளும், எச்சரிக்கையும் விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், விழுப்புரத்தை சேர்ந்த 5 இளைஞர்கள் திருவளர்சோலை அருகே காவிரி ஆற்றில் குளிக்க முற்பட்டனர். அப்போது பாதுகாப்புக்காக அங்கிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். போலீசார் அங்கிருந்து செல்லும்வரை அங்கேயே 5 இளைஞர்களும் காத்திருந்தனர். பின்னர் வேறு பகுதிக்கு போலீசார் சென்றபோது, 5 பேரும் ஆற்றில் இறங்கினர்.
ஆனால் அவர்கள் இறங்கிய பகுதி மிகவும் ஆழமான பகுதி என கூறப்படுகிறது. ஆற்றிலும் வெள்ளம் அதிகமாக பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. இதில் 3 பேர் அந்த வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். 3 நண்பர்களையும் காப்பாற்ற முடியாமல் தவித்த உடன் இருந்த மற்ற நண்பர்கள் பதறியடித்து உடனடியாக கரையேறினர். அங்கிருந்த பொதுமக்கள், மற்றும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்தனர்.
விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சசி என்ற 19 வயதுடைய இளைஞரின் உடலை தேடி கண்டுபிடித்தனர். வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட சசிகுமார் 25, விக்னேஷ் 14, ஆகியோரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.