தஞ்சை அருகே கோவில் திருவிழாவில் மோதல்: 3 பேர் கத்தியால் குத்தி படுகொலை
கோவில் திருவிழாவில் 3 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
பட்டுக்கோட்டை: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பட்டுக்கோட்டை அருகே மஞ்சவயல் கிராமத்தில் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் நேற்றிரவு நடைபெற்றது. இந்த விழாவில் அந்த கிராமத்தின் இரு சமூகத்தாரும் பங்கேற்றிருந்தனர். அப்போது சுவாமிக்கு பூஜை செய்வது தொடர்பாக இரு சமூகத்தாரிடையே திடீர் மோதல் ஏற்பட்டது.

இதில் இரு தரப்பினரும் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் பயங்கரமாக மோதிக் கொண்டனர். சிலர் உருட்டை கட்டையால் ஒருவர்மீது ஒருவர் தாக்கி கொண்டனர். மேலும் இரு தரப்பினரின் வீடுகள், வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டதால் அந்த இடமே போர்க்களம் போல் காட்சியளித்தது.
இந்த தாக்குதலில் பிரதீப், சிவநேசன் ஆகியோர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தனர். மேலும் தாக்குதலில் பலத்த காயமடைந்த 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ராஜேஷ் கண்ணா என்பவர் உயிரிழந்தார். உயிரிழந்த பிரதீப்பும்-ராஜேஷ் கண்ணாவும் உடன்பிறந்த சகோதரர்கள் என கூறப்படுகிறது. மோதல் நடைபெற்ற அப்பகுதியில் பதட்டமான சூழல் தொடர்ந்து நிலவுவதால், நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications