தொண்டை வலி: திண்டிவனம் பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டு கிளம்பிய விஜயகாந்த்
விழுப்புரம்: விழுப்புரம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு திடீர் என்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் பிரச்சாரத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டார்.
நாடாளுமன்ற தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் உமாசங்கருக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், திண்டிவனம் ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்வார் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி அவர் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் இருந்து தனது பிரச்சாரத்தை துவங்கினார். உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர் பேசுகையில்,
தொண்டை வலி அதிகம் உள்ளதால் என்னால் பேச முடியவில்லை. மருத்துவர்கள் என்னை பிரச்சாரத்திற்கு செல்ல வேண்டாம் என்றார்கள். நான் தான் பிரச்சாரம் செய்வேன் என்று வந்திருக்கிறேன். வலியால் என்னால் அதிகம் பேச முடியவில்லை. அதனால் உமாசங்கருக்கு கொட்டும் முரசு சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
விஜயகாந்த் தொண்டை வலியால் அவதிப்பட்டதால் திருக்கோவிலூர், திண்டிவனத்தில் நடைபெறுவதாக இருந்த பிரச்சாரக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.