'இடி’ தான் விபத்திற்குக் காரணம்... நாங்கள் பொறுப்பல்ல: கட்டுமான நிறுவனம் ‘திமிர்’ விளக்கம்
சென்னை: இதுவரை 11 பேரின் உயிரைப் பலி வாங்கியுள்ள சென்னைப் போரூர் 11 மாடி கட்டிட விபத்திற்கு இடி விழுந்ததுதான் காரணம் என கட்டுமான நிறுவனம் ‘பிரைம் சிருஷ்டி'யின் இயக்குனர் பாலகுரு விளக்கமளித்துள்ளார்.
நேற்று மாலை சென்னையில் திடீரென இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதில், சென்னையை அடுத்த போரூர் அருகே மவுலிவாக்கத்தில் கட்டுமானம் நடந்து கொண்டிருந்த 11 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததில் 11 பேர் பலியாகியுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியுள்ள மீதமுள்ள 40 பேரை மீட்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் அவரது மகன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இந்தக் கோர கட்டிட விபத்திற்கு கட்டிடத்தின் மீது இடி விழுந்தது தான் காரணம் என விபத்துக்குள்ளான கட்டிடத்தைக் கட்டிவரும் கட்டுமான நிறுவனமான பிரைம் சிருஷ்டியின் இயக்குநர் பாலகுரு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
‘11 மாடி கட்டிடம் முறையான அனுமதி பெற்றே கட்டப்பட்டு வந்தது. எந்த விதி மீறலும் கிடையாது. இடி விழுந்ததுதான் கட்டிடம் இடிந்து விழுந்ததற்கு காரணம். எனவே கட்டிடம் இடிந்து விழுந்ததற்கு பொறுப்பு ஏற்க முடியாது.
கட்டிடத்தின் கட்டுமானப் பணி முடிந்தபிறகுதான் வழக்கமாக இடிதாங்கும் கருவி பொருத்தப்படுவது வழக்கம். கட்டிடம் இப்போதுதான் நிறைவு கட்டத்தை எட்டி வந்தது. விபத்தின்போது 50 பேர் கட்டிடத்தில் இருந்தனர். சம்பவத்தின்போது பலத்த மழை பெய்தது' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications