உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக- காங்கிரஸ் கூட்டணி தொடரும்: டி.கே.எஸ். இளங்கோவன்
சென்னை: உள்ளாட்சித் தேர்தலிலும் காங்கிரஸுடன் கூட்டணி நீடிக்கும் என்று திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
சட்டசபைத் தேர்தலில் திமுக- காங்கிரஸ் ஆகியவை கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. இதில் காங்கிரஸ் கட்சி 41 தொகுதிகளில் போட்டியிட்டு 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
இந்தக் கூட்டணி குறித்து பல்வேறு விதமான கருத்துக்கள் உலா வருகின்றன. காங்கிரஸுக்கு இத்தனை இடங்களைக் கொடுத்திருக்காமல், திமுக அதிக இடங்களில் போட்டியிட்டிருந்தால் நிச்சயம் திமுக ஆட்சியைப் பிடித்திருக்கும் என்று பலரும் கூறி வருகின்றனர்.
இருப்பினும் காங்கிரஸ் வெல்லாத இடங்களில் திமுகவினர் சரியாக வேலை பார்க்கவில்லை என்று தான் கருதுவதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இந்த நிலையில் காங்கிரஸுடன் கூட்டணி தொடரும் என்று திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
கூட்டணி தொடரும்
சட்டசபைத் தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியுடன் அமைத்த கூட்டணி நீடிக்கிறது. உள்ளாட்சித் தேர்தலுக்கும் இது நீடிக்கும்.
ஒருங்கிணைந்து செயல்படுவோம்
சட்டசபையில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக திமுக செயல்படும். எப்போதுமே நாங்கள் கூட்டணிக் கட்சிகளை மதிப்பவர்கள். அது சட்டசபையிலும் தொடரும்
காங். தீவிரம் காட்டாத ஈழப் பிரச்சினை
காங்கிரஸ் கட்சி அதிக தீவிரம் காட்டாத ஈழத் தமிழர் பிரச்சினை போன்றவற்றில் நாங்கள் எங்களது கருத்துக்கேற்ப, சுதந்திரமாக செயல்படுவோம்.
அரசின் செயல்பாடுகளைப் பொறுத்து
சட்டசபையில் அரசு எப்படி நடந்து கொள்கிறதோ அதை வைத்து எங்களது நடவடிக்கையும் இருக்கும். அரசின் செயல்பாடுகளைப் பொறுத்து எங்களது உத்திகளும் அமையும்.
உள்ளாட்சித் தேர்தல் வியூகம்
இப்போதுதான் சட்டசபைத் தேர்தல் முடிந்துள்ளது. அடுத்து உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான உத்திகளை கட்சி மேலிடம் வகுத்து, கட்சி பேச்சாளர்களுக்குத் தெரிவிக்கும். அதற்கேற்ப மக்களிடம் வைக்க வேண்டிய பிரச்சினைகள் குறித்து முடிவெடுத்து அதை செயல்படுத்துவோம்.
ரூ. 570 கோடி விவகாரம்
ரூ. 570 கோடி விவகாரம் தொடர்பான உண்மைகள் வெளிவந்தாக வேண்டும் அதற்காகவே பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளோம். இதில் சிபிஐ விசாரணை நடந்தால்தான் உண்மை தெரிய வரும். இது தனிப்பட்ட நபருக்குச் சொந்தமான பணமா அல்லது வங்கிப் பணமா என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும். வங்கிப் பணம் என்றால், கொண்டு சென்ற விதத்தில் ஏகப்பட்ட குழப்பங்கள் உள்ளன. அது தெளிவுப்படுத்தப்பட வேண்டும். எனவே சிபிஐ விசாரணை அவசியமாகிறது என்றார் அவர்.