புலிகள் கணக்கெடுப்பு நாளை தொடக்கம்: மணிமுத்தாறு வனப்பகுதிக்குள் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை
புலிகள் கணக்கெடுப்பு நடக்க இருப்பதால் சுற்றுலா பயணிகள் மணிமுத்தாறு வனப்பகுதிக்குள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்
நெல்லை: புலிகள் கணக்கெடுப்பு நாளை தொடங்கவுள்ளதால் முண்டத்துறை புலிகள் காப்பகம் மற்றும் மணிமுத்தாறு வனப்பகுதிக்குள் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்திய அளவில் தேசிய புலிகள் கணக்கெடுப்பு பணி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடந்து வருகிறது. 2007ம் ஆண்டு முதல் இந்த கணக்கெடுப்பு நடந்து வரும் நிலையில் 4வது தேசிய புலிகள் கணக்கெடுப்பு முகாம் நாளை தொடங்குகிறது. இந்த கணக்கெடுப்பு பிப்ரவரி 3ம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முண்டத்துறை காப்பாக இயக்குனர் பார்கவதேஜா கூறுகையில், தேசிய அளவிலான புலிகள் கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளதாகவும், தமிழகத்தில் இரண்டாவது பெரிய புலிகள் சரணாலயமாக முண்டத்துறை புலிகள் காப்பகம் உள்ளதாகவும் கூறினார். மேலும் இந்த பகுதியில் உள்ள 50 பீட்டுகளில் ஒரே நேரத்தில் கணக்கெடுப்பு பணி நடப்பதாகவும், அம்பை பிரிவில் வனச்சரகர் மற்றும் தன்னார்வலர்கள், கல்லூரி மாணவர்கள் உள்பட 200 பேர் இதில் ஈடுபடுவார்கள் என்றும் அவர் கூறினார்.
வனப்பகுதிக்குள் 29 பிரிவுகளாக இவர்கள் பிரிந்து சென்று கணக்கெடுப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவித்த அதிகாரிகள், கணக்கெடுப்பில் ஈடுபடுபவர்களுக்கு இன்று பயிற்சி அளிக்கப்படுவதாகவும் கூறினர். புலிகள் கணக்கெடுப்பு பணி நடைபெறுவதை தொடர்ந்து மணிமுத்தாறு, அகஸ்தியர் அருவி, காரையாறு வனப்பகுதிக்குள் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிப்ரவரி 5ம் தேதிக்கு வரை இந்த தடை நீடிக்கும் என்றும் அதன்பின் சுற்றுலா பயணிள் அனுமதிக்கப்படுவர் என்றும் வனத்துறையினர் கூறியுள்ளனர்.