தொடரும் புலி வேட்டை: 17 பள்ளிகளுக்கு மீண்டும் இரண்டு நாள் விடுமுறை!
உதகமண்டலம்: புலியைப் பிடிக்கும் நடவடிக்கை தீவிரமடைந்துள்ளதால், குந்தசப்பை பகுதியிலுள்ள 17 பள்ளிகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் அருகேயுள்ள சோலாடா கிராமத்தைச் சேர்ந்த கவிதா என்பவர்தான் புலி தாக்குதலுக்கு முதலில் பலியானவர். கடந்த 4-ம் தேதி மாலை மளிகைப் பொருட்களை வாங்கச் சென்றவரை அடித்து கொன்று தின்றது புலி.
அடுத்த பலி... தொட்டபெட்டா ஊராட்சி, அட்டபெட்டுவைச் சேர்ந்த சின்னப்பன். 6-ம் தேதி இரவு இயற்கை உபாதையைக் கழிக்க வெளியே சென்றவர் புலியால் தாக்கப்பட்டு இறந்தார். மூன்றாவது பலி, ஊட்டி அருகேயுள்ள தும்மனட்டி கச்சேரி பகுதியைச் சேர்ந்த முத்துலட்சுமி. கடந்த 8-ம் தேதி தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தவரை அவரது கணவர் கண் எதிரிலேயே கொடூரமாகத் தாக்கி கொன்றது புலி.
3 பேரை அடித்துக் கொன்ற புலியை பிடிக்கும் பணியில், மாவட்ட நிர்வாகம், வனத்துறையினர், மற்றும் சிறப்பு அதிரடி படையினர் ஈடுபட்டுள்ளனர்.

கூண்டில் சிக்காத புலி
மக்களை உஷார்படுத்தியுள்ள வனத் துறையினர், புலியைப் பிடிப்பதற்கான முயற்சிகளைத் தொடங்கியுள்ளனர். புலியைப் பிடிக்க முதலில் மேற்கொண்ட நடவடிக்கை கூண்டு அமைப்பதுதான். ஐந்து கூண்டுகள் கொண்டுவரப்பட்டு, புலி நடமாட்டம் உள்ளதாக சந்தேகிக்கப்படும் பகுதிகளில் அதனை வைத்து இரையாக நாய், ஆடுகளைக் கூண்டினுள் கட்டிவைத்தனர். ஆனால், அது பலன் அளிக்கவில்லை. 67 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கும்கியும் கைகொடுக்கலை
கூண்டு அமைத்தும் புலி பிடிபடாத நிலையில், மயக்க ஊசி செலுத்தி புலியைப் பிடிக்க வனத் துறையினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அடர் வனம் என்பதால்... கும்கி யானைகளை வரவழைத்து, யானையின் மேல் வன அலுவலர், கால்நடை மருத்துவர் ஆகியோர் மயக்க ஊசி கொண்ட துப்பாக்கியுடன் தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். ஆனால், ஒரு வார தேடுதல் பணியில் இவை எதுவும் பலன் அளிக்கவில்லை.

10 நாட்களாக தேடுதல் வேட்டை
கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சிக்காத புலியை பிடிக்க தற்போது ஆம்புஸ் எனப்படும் பதுங்கியிருந்து தாக்கும் முறையை வனத்துறையினர் கையாண்டு வருகின்றனர்.
புலி நடமாட்டத்தை முன்கூட்டியே அறிவிக்கக் கூடிய கருவியை தேயிலை தோட்டத்தில் பொருத்தி புலியைத் தேடி வருகின்றனர். இந்த கருவியோடு 5 செல்போன் எண்களுக்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 100 முதல் 250 அடி வரை புலியின் நடமாட்டத்தை இந்த கருவியின் மூலம் உணர முடியும்.

தண்ணி காட்டும் புலி
கடந்த வாரம் தேயிலை தோட்டத்திற்குள் வந்த புலியை கூட்டுப்படையினர் 4 திசைகளில் இருந்தும் சுற்றி வளைத்தனர். ஆனால் அந்த பகுதி அடர்ந்த புதர்செடிகளை கொண்டு இருந்ததாலும், இருட்ட ஆரம்பித்து விட்டதாலும் புலி அங்கிருந்து மின்னல் வேகத்தில் பாய்ந்து தப்பி புதரில் மறைந்தது.

பள்ளிகளுக்கு விடுமுறை
புலியைப் பிடிக்கும் நடவடிக்கை தீவிரமடைந்துள்ளதால், குந்தசப்பை பகுதியிலுள்ள 17 பள்ளிகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புலிகளால் கொல்லப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண நிதி அறிவித்துள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா, விரைவில் புலியைப் பிடிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். முதல்வர் இப்போது கொடநாட்டில் தங்கி இருப்பதால், புலியைத் தேடும் பணி தீவிரமாகவே நடந்து வருகிறது என்று கூறியுள்ளார் கலெக்டர் சங்கர். புலி சிக்குமா?












Click it and Unblock the Notifications