கொடநாடு எஸ்டேட்டில் திடீர் பாதுகாப்பு அதிகரிப்பு.. துப்பாக்கி ஏந்திய போலீசார் இரவு பகலாக ரோந்து
ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் துப்பாக்கி ஏந்திய போலீசார் இரவு பகலாக ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். போயஸ் கார்டனைத் தொடர்ந்து கொடநாடு எஸ்டேட்டிற்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கோத்தகிரி: நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பங்களாவிற்கு திடீரென பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவிற்கு கொடநாட்டில் பங்களா உள்ளது. இந்த இடத்தில் ஜெயலலிதா அவ்வப்போது சென்று ஓய்வெடுப்பார். அவர் மறைந்த நிலையில், இந்த எஸ்டேட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 24ம் தேதி காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டு, வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தக் கொலை பின்னர் கொடநாட்டில் உள்ள 12 நுழைவு வாயில்களுக்கும் தலா 2 பேர் வீதம் காவலாளிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
போயஸ் கார்டன்
இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டன் இல்லம் நினைவிடமாக்கப்படும் என்று நேற்று அறிவித்தார். இதையடுத்து உடனடியாக போயஸ் கார்டன் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
கொடநாட்டில் பாதுகாப்பு அதிகரிப்பு
இதனைத் தொடர்ந்து, கொடநாடு பங்களாவிலும் பாதுகாப்புகள் திடீரென அதிகரிக்கப்பட்டுள்ளன.
நேற்று மாலை முதல் கொடநாட்டில் வழக்கத்தை விட அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
துப்பாக்கி ஏந்திய போலீசார்
மேலும், துப்பாக்கி ஏந்திய போலீசார் இரவு பகலாக ரோந்து சுற்றி வருகின்றனர். சந்தேகத்திற்குரிய வகையில் யார் அந்தப் பக்கம் வந்தாலும் அவர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
தீவிர கண்காணிப்பு
அந்த ஊர் மக்கள் மட்டும் அல்லாமல் கொடநாடு காட்சி முனையைப் பார்வையிட வரும் சுற்றுலா பயணிகளும் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர். தீவிர சோதனை செய்த பிறகே சுற்றுலாப் பயணிகள் அந்தப் பகுதிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.