விடிய விடிய கொட்டிய கனமழை: திருச்செந்தூர் பைபாஸ் சாலையில் போக்குவரத்து நிறுத்தம்
தூத்துக்குடி: திருச்செந்தூரில் நேற்று நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே பெய்த கனமழையால் அனைத்து ஏரிகளும், குளங்களும் நிறைந்து மறுகால் பாய்ந்து வருகின்றன. பல ஏரிகளும், குளங்களும் உடையும் அபாய நிலையில் உள்ளன. இந்நிலையில் தற்போது மீண்டும் கனமழை பெய்து வருவதால், பாதுகாப்பு கருதி திருச்செந்தூர் பைபாஸ் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு வழக்கத்தை விட கூடுதலாக பெய்துள்ளது. கடந்த மாதம் வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் கன மழை கொட்டியதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் கோரம்பள்ளம் குளம் உடைந்து நகருக்குள் புகுந்ததில் கலெக்டர் அலுவலகம், சோரீஸ்புரம், ஸ்டேட் பேங்க் காலனி, தனசேகரன் நகர், முத்தையாபுரம், அத்திமரப்பட்டி, ஸ்பிக்நகர் உள்ளிட்ட நகரின் அனைத்து பகுதிகளையும் வெள்ளம் சூழ்ந்தது. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் லட்சக்கணக்கான மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக மழை நின்று வெயில் அடித்தது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் தேங்கி நின்ற மழை நீர் வடியத்தொடங்கியது. வெள்ள பாதிப்புகளில் இருந்து தூத்துக்குடி மக்கள் ஓரளவிற்கு மீண்டு வர தொடங்கிய நிலையில் மாவட்டம் முழுவதும் நேற்று நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறது.

வாகன போக்குவரத்து பாதிப்பு
தூத்துக்குடி புறநகர் பகுதிகளான முத்தையாபுரம், முள்ளக்காடு, ஸ்பிக்நகர் கோவங்காடு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தூத்துக்குடி- திருச்செந்தூர் பிரதான சாலை மீண்டும் வெள்ளக்காடாக மாறியது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் ஊர்ந்தபடி மெதுவாக செல்கின்றன.

வீடுகளுக்குள் வெள்ளம்
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை விடாமல் கொட்டிய கனமழையால் திருச்செந்தூர் அருகே உள்ள குமாரபுரத்தில் பெய்த கனமழையால் 50 வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் அந்த வீடுகளில் உள்ள மக்கள் வெளியேற முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.

முடங்கிய மக்கள்
சாயர்புரம், ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் தூத்துக்குடி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் மீண்டும் மழை பெய்து வருவதால் தொடர்ந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
உடன்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

கருமேனியாற்றில் வெள்ளம்
கடந்த சில வாரங்களாக பெய்த கனமழையால் கருமேனி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக பிறைகுடியிருப்பு- மணிநகர் சாலையில் உள்ள கருமேனி ஆற்று தரைப்பாலத்தின் மேல் சுமார் 6 அடி உயரத்திற்கு வெள்ளம் செல்வதால் அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அனைத்து வாகனங்களும் உடன்குடியில் இருந்து மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன.

போக்குவரத்து துண்டிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே பெய்த கனமழையால் அனைத்து ஏரிகளும், குளங்களும் நிறைந்து மறுகால் பாய்ந்து வருகின்றன. பல ஏரிகளும், குளங்களும் உடையும் அபாய நிலையில் உள்ளன. இந்நிலையில் தற்போது மீண்டும் கனமழை பெய்து வருவதால், பாதுகாப்பு கருதி திருச்செந்தூர் பைபாஸ் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications