திருச்செந்தூர் கடலில் திடீரென 50 அடிக்கு கடல் உள்வாங்கியதால் பரபரப்பு! கோயில் நிர்வாகம் செய்த செயல்!
திருச்செந்தூர்: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கடலில் திடீரென 50 அடிக்கு கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருவார்கள்.

திருவிழா நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்வார்கள். இந்த நிலையில் திருச்செந்தூர் கடற்கரையில் பவுர்ணமி, அமாவாசை, அஷ்டமி போன்ற கனத்த நாளில் கடல் உள்வாங்கும்.
சில நேரங்களில் கடல் சீற்றம் ஏற்பட்டு கடல் நீர் கடற்கரையை தாண்டி வெளியே அலையடிக்கும். இந்த நிலையில் இன்று முகூர்த்த நாள் என்பதாலும் சதுர்த்தி என்பதாலும் ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூருக்கு வந்தனர்.
இன்று மட்டும் திருச்செந்தூரில் 300 திருமணங்கள் நடந்தன. இதனால் சுவாமி தரிசனம் செய்ய கூட்டம் அலைமோதுகிறது. பொதுவாக திருச்செந்தூராரை தரிசனம் செய்வதற்கு முன்பு கடற்கரையில் குளித்துவிட்டு நாழி கிணற்றில் நீராடிவிட்டு செல்வது வழக்கம்.
அந்த வகையில் திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்கள் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென 50 அடிக்கு கடல் உள்வாங்கியது. இதனால் பக்தர்கள் பலர் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். எனினும் சில பக்தர்கள் குளித்துக் கொண்டிருந்தனர்.

அவர்களை அந்த இடத்தை விட்டு ஊழியர்கள் அனுப்பி வைத்தனர். கடல் உள்வாங்கியதால் பச்சை நிற பாசி படிந்த பாறைகள் வெளியே தெரிந்தன. அங்கு நின்று பக்தர்கள் சிலர் செல்ஃபி எடுத்து வந்தனர். அண்மைக்காலமாக நிறைய சிலைகள், கல்வெட்டுகள் எல்லாம் கரை ஒதுங்கி வருகிறது.
இவற்றை தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். சில கல்வெட்டுகளில் திருச்செந்தூரை சுற்றி நிறைய கிணறுகள் இருந்ததாக சொல்லப்படுகிறது. அவை நாளடைவில் பராமரிப்பில்லாமல் காணாமல் போனதாகவும் தெரிகிறது.
கடந்த நவம்பர் மாதத்தில் கூட அமாவாசை நாளுக்கு இரு நாட்களுக்கு முன்பு கடல் உள்வாங்கியது. அது போல் சில நேரங்களில் ஜெல்லி மீன்கள் வெளியே வரும். இவரை நீரோட்டத்தின் மாறுபாடு காரணமாக வெளியே வரும். இவை உடம்பில் பட்டால் ஒவ்வாமை ஏற்படும். அந்த சமயங்களிலும் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் எச்சரிக்கை அளிக்கும்.












Click it and Unblock the Notifications