சகல வளமும் தரும் திருவண்ணாமலை தீபம்- அனைவர் வாழ்விலும் ஒளி பரவட்டும்!
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கார்த்திகை மாத மகா தீபத் திருவிழா இன்று நடைபெற்று வருகின்றது. திருவண்ணாமலையே அடிமுடா காண இயலா அண்ணாமலையாராக கோயில் கொண்டுள்ளதாக ஐதீகம். அதனால் மலையையே மகேசனாக நினைத்து வருடா வருடம் இங்கு கார்த்திகை பெளர்ணமி அன்று தீபம் ஏற்றி வழிப்படப்படுகின்றது.
பஞ்ச பூத்தலங்களும் அக்னித்தலமாகப் போற்றப்படுகிறது நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை. சிவபெருமான் ஜோதிப்பிழம்பாய் நின்ற இடமே இன்று கார்த்திகைத் திருநாளில் தீபம் ஏற்றப்பட்டு அனைவராலும் வழிபடப்படுகிறது.
தீபவழிபாடு பண்டைய காலந்தொட்டே பலமுறைகளிலும் நடைபெற்று வருகிறது. சைவர், வைஷ்ணவர், ஜைனர் என்ற பாகுபாடு இன்றி எல்லா மதத்தினரும் தீபவழிபாட்டைக் கடைபிடிக்கின்றனர்.
மெய்ஞான ஒளியை ஏற்ற:
இது கார்த்திகை மாதத்தில் பெளர்ணமி திதியில் கிருத்திகை நட்சத்திரத்தில் வருவது. தீப ஒளியின் தாத்பர்யம் நம்முன் இருக்கும் அஞ்ஞான இருளைப் போக்கி மெய்ஞானத்தைத் தருவதாகும். பண்டைய காலத்தில் ஞாயிறு, திங்கள், நெருப்பு இம்மூன்றையும்தான் தமிழர்கள் வழிபட்டு வந்தனர் என்று சொல்வார்கள்.
விளக்கேற்றி வழிபாடு:
''அன்பே தகழியா ஆர்வமே நெய்யாக இன்புருகு சிந்தை இடுதிரியா - என்புருகி ஞானச்சுடர் விளக்கு ஏற்றனேன் நாரணர்க்கு ஞானத் தமிழ் புரிந்த நான்" என்று சொல்லி கார்த்திகை மாதத்தில் தினமும் மாலையில் விளக்கேற்றி வழிபட வேண்டும்.
ஆற்றில் விடும் பழக்கம்:
இன்று தினமும் காசியிலும், ஹரித்துவாரிலும் மாலையில் தீபம் ஏற்றி இலையில் வைத்து
பூக்களுடன் ஆ ற்றில் விடும் பழக்கம் இருந்து வருகிறது. கங்கைக்கு தீபம் காட்டி வழிபடுவது இன்றும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
கண்கள் ஜொலிக்கும் கார்த்திகை தீபம்:
சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற சங்க நூல்களில் பாவை விளக்குகள் பற்றி முக்கியமாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. "கார்த்திகை தீபக்காட்சிக் கண்டு களித்தவர்களின் கண்கள்தான் கண்கள். மற்றவர்களின் கண்கள் வெறும் புண்கள் '' என்று பொங்கையாழ்வார் கார்த்திகை தீபத்தைப் பற்றிச் சிறப்பாக குறிப்பிடுகிறார்.
ஐந்து முக விளக்கு:
குத்து விளக்கில் இருக்கும் ஐந்து முகங்களையும் ஏற்றி வைத்தால் அந்த இடம் லஷ்மிகரமாக இருக்கும். ஐந்து முகங்களையும் பெண்களின் மன உறுதி, நிதானம், சமயோசித புத்தி, சகிப்புத் தன்மை, அன்பு இவற்றிக்கு ஒப்பிடுவார்கள்.
விளக்கைத் தூண்டி பேரு பெற்றவன்:
முற்பிறவியில் மகாபலிச் சக்கரவர்த்தி எலியாக பிறந்திருந்தது. தான் அறியாமலேயே, தினமும் விளக்கில் இருக்கும் எண்ணெய் குடித்து வரும்போது, திரி தூண்டி வந்தது. இதன் காரணமாக கர்ப்பக்கிரகத்தினுள் சர்வகாலமும் விளக்குப் பிரகாசமாக ஒளி நிறைந்து விளங்கிற்று.
எலி செய்த புண்ணியம்:
அறியாமலே எலி செய்த புண்ணிய காரியத்தினால் அடுத்த பிறவியில் மகாபலிச் சக்கரவர்த்தியாகப் பிறவியை அடைந்தது. இறைவன் மகாபலிக்கு முக்தி கொடுத்தபோது மகாபலியின் விருப்பப்படி, கார்த்திகை தீபம் எல்லா இடங்களிலும் சிறப்பாக நடைபெற இறைவன் திருவுளம் கொண்டான். அதுவே கார்த்திகை தீபம்! தீப ஒளி எல்லார் வாழ்க்கையிலும் வெளிச்சத்தை கொண்டு வரட்டும்!