டெங்கு எதிரொலி: நிலவேம்பு கசாயத்திற்கு முண்டியடிக்கும் மக்கள்
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் மீண்டும் பரவி வருவதால் பொதுமக்கள் நிலவேம்பு கசாயத்திற்காக அரசு மருத்துவமனைகளில் அலைமோதுகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் கடந்த ஒரு மாத காலமாக டெங்கு காய்ச்சல் மீண்டும் தலை தூக்கியுள்ளது. இதுவரை 3 குழந்தைகள் உயிர் இழந்துள்ளனர். பிற காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகியும் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காய்ச்சலை தடுப்பதில் சித்த மூலிகை மருந்தான நிலவேம்பு கசாயம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. நெல்லை அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள திருமூலர் மாளிகை கட்டிடத்தில் பருவமழை காலம் துவங்கும் முன்பே கசாயம் வழங்க சிறப்பு பிரிவு திறந்து காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்படுவது வழக்கம்.
தற்போது இந்த சிறப்பு பிரிவு செயல்படவில்லை. மேலும் வழக்கமான மருந்துகள் கொடுக்கப்படும் இடங்களில் மட்டும் இந்த கசாயம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மீண்டும் டெங்கு தலை தூக்கியுள்ளதால் அதில் இருந்து தற்காத்து கொள்ள பலர் நில வேம்பு கசாயம் வேண்டி நெல்லை அரசு சித்த மருத்துவக் கல்லூரி முன்பு காத்து கிடக்கின்றனர்.
காலை 7 மணி முதலே பொதுமக்கள் வந்து காத்து கிடக்கின்றனர். சிலர் கசாயத்தை பாத்திரங்களில் வீட்டுக்கு வாங்கி செல்ல முற்படுகின்றனர். ஆனால் மருத்துவமனை சார்பில் நாள் ஒன்றுக்கு 25 லிட்டர் மட்டுமே நிலவேம்பு கசாயம் தயாரித்து வழங்கப்பட்டு வருகிறது. இதனால் சில சமயங்களில் அரை மணி நேரத்தில் கசாயம் காலியாகி விடுகிறது. எனவே இந்த கசாயத்தை கூடுதலாக தயாரித்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.












Click it and Unblock the Notifications