நெல்லை சித்த மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கை எப்போது?: மாணவர்கள் தவிப்பு
நெல்லை: பிளஸ் டூ முடிவுகள் வெளியிடப்பட்டு சுமார் 2 வாரத்திற்கும் மேல் ஆகிவிட்டது. ஆனால் நெல்லை சித்த மருத்துவ கல்லூரியில் இதுவரை மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வழங்கப்படவில்லை. இதனால் மாணவ, மாணவிகள் விரக்தியில் உள்ளனர்.
தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் கடந்த 9ம் தேதி வெளியாகின. அதற்கு முன்னதாகவே கடந்த 3ம் தேதியில் இருந்து என்ஜினியரிங் படிப்புக்கான விண்ணப்பம் வினியோகம் செய்யப்பட்டுவிட்டது. தொடர்ந்து மருத்துவம், சட்டம் உள்ளிட்ட படிப்புகளுக்கும் விண்ணப்பம் வினியோகம் செய்யப்பட்டது.
பல கல்லூரிகளில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு கலந்தாய்வு நடத்த ஆயத்தம் ஆகி வருகின்றன. ஆனால் நெல்லை சித்த மருத்துவ கல்லூரியில் 2014-15ம் ஆணடுக்கான சேர்க்கை விண்ணப்பம் வினியோகம் இதுவரை வழங்கப்படவில்லை. பிளஸ் டூ சான்றிதழ் வழங்கப்பட்டு 20 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் சித்த மருத்துவ கல்லூரியில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் குழப்பத்தில் சிக்கி தவிக்கின்றனர். இனி அறிவிப்பு வெயிட்டாலும் விண்ணப்பித்து இங்கு இடம் கிடைக்காவிட்டால் வேறு கல்லூரியிலும் சேர முடியாது. அங்கு அட்மிஷன் முடிந்து சீட் நிரம்பிவிடும். இதனால் 1 வருடம் காத்திருந்து படிக்க வேண்டும் என்ற கவலையில் உள்ளனர்.
இது குறித்து சித்த மருத்துவ கல்லூரியில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் கூறுகையில், ஆங்கில மருத்துவத்துக்கு முக்கியத்துவம் தரும் மத்திய, மாநில அரசுகள் இந்திய இயற்கை மருத்துவமான சித்த மருத்துவ கல்லூரிக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும். அனைத்து துறைகளிலும் மாணவர் சேர்க்கை மும்முரமாக நடக்கும் போது சித்த மருத்துவ கல்விக்கு எப்போது விண்ணப்பம் வழங்கப்படும் என இந்த கல்லூரிகளுக்கு சென்று கேட்க வேண்டி உள்ளது. ஆனால் கல்லூரி நிர்வாகம் இது குறித்து உரிய பதில் கூறாமல் இழுத்து அடித்து வருகிறது என்றனர்.