திருப்பரங்குன்றத்தில் திமுக வேட்பாளர் சரவணன் வேட்புமனு தாக்கல்
திருப்பரங்குன்றம் தொகுதியில் நடைபெற உள்ள இடைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் சரவணவன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் தொகுதியில் நடைபெற உள்ள இடைத் தேர்தலில் திமுக சார்பில் டாக்டர் சரவணன் போட்டியிருக்கிறார். அவர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.
வரும் 19ம் தேதி அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம், புதுவையில் உள்ள நெல்லித்தோப்பு ஆகிய 4 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை கடந்த 17ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 26ம் தேதி தொடங்கியது.
தேர்தல் தேதி வெளியிட்ட உடன், ஆளும் அதிமுகவும் எதிர்க்கட்சியான திமுகவும் தங்களது வேட்பாளர்களை அறிவித்தனர். அதிமுக சார்பில் போட்டியிட உள்ள நான்கு பேரும் கடந்த வெள்ளிக் கிழமை ஒரே நேரத்தில் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். திமுக சார்பில், அரவக்குறிச்சி மற்றும் தஞ்சையில் போட்டியிடும் வேட்பாளர்களான கே.சி. பழனிச்சாமி மற்றும் அஞ்சுகம் பூபதி ஆகியோரும் வெள்ளிக் கிழமை தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், இன்று திருப்பரங்குன்றத்தில் திமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் சரவணன் தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார்.
வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்பாக , திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஐ. பெரியசாமியின் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று டாக்டர் சரவணன் தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.
அதிமுகவைச் சேர்ந்த ஏ.கே. போஸ் மற்றும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மகாதேவன் உள்ளிட்ட 5 வேட்பாளர்கள் இதுவரை இந்தத் தொகுதியில் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.