தோஷம் கழிக்க விளக்கேற்றி “ஓம் நமோ நாராயணாய” கோஷம்.. திருப்பதி தேவஸ்தான வேண்டுகோளை ஏற்ற பக்தர்கள்!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில், கடந்த ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில், விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக தற்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்தக் குற்றச்சாட்டு பின்பு குஜராத்தின் தேசிய பால்வள மேம்பாடு வாரியத்தின் கீழ் இயங்கும் கால்நடை மற்றும் உணவுப் பகுப்பாய்வு மற்றும் கற்றல் மையத்தின் ஆய்வில் உறுதி செய்யப்பட்டது.
அந்த ஆய்வின் முடிவில், திருப்பதி லட்டில் விலங்கின் கொழுப்பு கலக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. அதேசமயம், லட்டு தயாரிக்க நெய் அனுப்பிய தமிழ்நாட்டு நிறுவனத்தை திருப்பதி தேவஸ்தான போர்டு கருப்பு பட்டியலில் வைத்துள்ளது. மேலும், லட்டு விவகாரம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தி வருகிறது.

பிரசாதம் தயாரிக்க திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு கலப்பட நெய் சப்ளை செய்யப்பட்ட விவகாரத்தில் கோயிலுக்கு ஏற்பட்டுள்ள தோஷத்தை போக்க இன்று காலை 6 மணி முதல் 10 மணி வரை ஏழுமலையான் கோயிலில் சாந்தி ஹோமம் நடத்தப்பட்டது. கோவிலின் தலைமை அர்ச்சகர் மற்றும் ஜீயர்கள் கலந்து கொண்டு சாந்தி யாகம் நடத்தினர்.
லட்டு தயாரிக்கும் அறையில் நாட்டு பசு மாட்டின் கோமியம் மூலம் தயாரிக்கப்பட்ட ஐந்து புனித பொருட்கள் அடங்கிய பஞ்சகவ்யம் மூலம் ஒட்டுமொத்த கோவில் வளாகமும் தூய்மைப்படுத்தப்பட்டது. திருப்பதி கோவிலில் உள்ள பிரசாத தயாரிப்பு கூடம், லட்டு விநியோக கவுண்டர் ஆகியவற்றில் நாட்டுப் பசுவின் கோமியம் தெளிக்கப்பட்டு குங்கிலிய புகை காட்டப்பட்டது.
லட்டில் மாட்டு கொழுப்பு கலந்தது பாவம் மட்டும் அல்லாமல் தீட்டாகவும் கருதப்படுகிறது. எனவே அந்த தோஷம் கழிய, பக்தர்கள் தங்களது வீடுகளில் இன்று மாலை சரியாக 6 மணிக்கு நெய் அல்லது எண்ணெய் கொண்டு தீபங்களில் விளக்கேற்றி 'ஓம் நமோ நாராயணாய' என்ற மந்திரத்தை உச்சரித்து வழிபட வேண்டும் என்று திருமலை தேவஸ்தானம் வேண்டுகோள் வைத்தது.
அதன்படி, இன்று திருப்பதி ஏழுமலையான் பக்தர்கள் ஏராளமானோர், திருப்பதி தேவஸ்தான வழிகாட்டுதலின் படி தங்கள் வீடுகளில் தீபம் ஏற்றி, 'ஓம் நமோ நாராயணாய' என்ற மந்திரத்தை உச்சரித்து வழிபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications