ஜோலார்பேட்டையில் சிலிர்ப்பு.. ரூபன் வீட்டு கொட்டகையில் ஆச்சரியம்.. தாய்மையால் திரண்ட திருப்பத்தூர்
திருப்பத்தூர்: இணையத்தில் ஒரு வீடியோ வெளியாகி, ஆச்சரியத்தை தந்து கொண்டிருக்கிறது. இதனால் ஜோலார்பேட்டையில் ரூபன் வீடு, அவ்வப்போது களைகட்டி விடுகிறதாம்.. என்ன நடந்தது ரூபன் வீட்டில்?
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்துள்ள கழிஞ்சூர் பகுதியில் சமீபத்தில் ஒரு ஆச்சரிய சம்பவம் நடந்தது.. அஙகுள்ள தெருக்களில் சுற்றி வரும் நாய் ஒன்று, ஒரு பூனைக்குட்டிக்கு பாலூட்டியிருக்கிறது.. அந்த பூனைக்குட்டியின் அம்மா எங்கேவென்று தெரியவில்லை.

பூனைக்குட்டி: தாயின்றி, இங்குமங்கும் ஓடியவாறே, பூனைக்குட்டி தவித்து கொண்டிருந்தது. இதைக்கண்ட, அந்த தெருநாய் குட்டிக்கு பாலூட்டி வருகிறது... வழக்கமாக பூனைகளை கண்டாலே நாய்கள் சீறி எழுந்துவிடும். ஆனால், இந்த பூனைக்குட்டியை தேடிச்சென்று, பால் புகட்டி வருவதை கண்டு, பொதுமக்கள் ஆச்சரியப்பட்டு போனார்கள்.
அதுமட்டுமல்ல, தன்னுடைய குட்டிகள் பால் கொடுத்தால்கூட எழுந்து செல்லும் நாயானது, பூனைக்குட்டி பால் குடிக்கும்போது மட்டும் அமைதியாக இருக்கிறதாம்.. அந்த பகுதியில் உள்ளவர்கள் மட்டுமல்லாமல், சுற்றுவட்டார மக்களே இதனை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றார்கள். இப்போது இன்னொரு சம்பவம் திருப்பத்தூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.
நாய்க்குட்டி: ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சி, ஜெய்பீம் நகர் பகுதி சேர்ந்தவர் ரூபன்.. 34 வயதாகிறது.. இவர் சொந்தமாக பசு ஒன்றை வளர்த்து வருகிறார்... கடந்த சில வாரங்களுக்கு முன்பு அந்த பகுதியில் உள்ள நாய், குட்டிகளை ஈன்றுள்ளது.. கடந்த சில நாட்களுக்கு முன்பு, இரை தேட சென்ற அந்த நாய், மறுபடியும் திரும்பி வரவேயில்லை. இதனால் பசியால் தவித்த குட்டிநாய், தாயை காணாமல் அதேபகுதியில் சுற்றி சுற்றித்திரிந்து வந்தது.
பிறகு திடீரென, அதே பகுதியிலிருக்கும் ரூபனுக்கு சொந்தமான கொட்டகை பகுதிக்குள், திடீரென அந்த நாய்க்குட்டி நுழைந்துவிட்டது. கொட்டகைக்குள் படுத்திருந்த பசுவின் அருகே சென்று, பால் குடிக்க ஆரம்பித்துவிட்டது..
நாய்க்குட்டியை திரும்பி பார்த்த பசுவும், எந்தவிதமான எதிர்ப்பும் தெரிவிக்காமல் அமைதியாக படுத்திருந்தது... அந்த நாய்க்குட்டியோ, தொடர்ந்து பால் குடித்துவிட்டு கொட்டகையிலிருந்து கிளம்பி சென்றுவிட்டது. இப்படி பசிக்கும்போதெல்லாம் கொட்டகைக்கு வந்து, பசுவிடம் பால் குடித்துவிட்டு போகிறதாம் அந்த நாய்க்குட்டி..
நெகிழ்ச்சி: இதனை பார்ப்பதற்காகவே சுற்றுவட்டார மக்கள் ரூபன் வீட்டிற்கு வருகிறார்களாம்.. இதனை வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளனர். இந்த சம்பவம்தான் ஜோலார்பேட்டையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications