சாதாரண காய்ச்சல்.. மருத்துவரிடம் சென்ற இளைஞர்.. மூளை பாதிக்கப்பட்டு மரணம்.. திருப்பத்தூரில் பரபரப்பு
திருப்பத்தூர்: சாதாரண காய்ச்சலுக்கு மருத்துவரிடம் சிகிச்சைப் பெற்ற இளைஞர் ஒருவர், மூளை பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் திருப்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தவறான சிகிச்சை காரணமாகவே இளைஞர் உயிரிழந்ததாக இளைஞரின் உறவினர்களும், ஊர்க்காரர்களும் குற்றம்சாட்டி வரும் நிலையில், அந்த மருத்துவர் தலைமறைவாகி உள்ளார்.
இதையடுத்து, அந்த மருத்துவர் உண்மையிலேயே மருத்துவரா அல்லது போலி மருத்துவரா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலி மருத்துவர்கள் அதிகரிப்பு
இந்தியாவில் போலி மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று நோயாளிகள் உயிரிழப்பது தொடர் கதையாகி வருகிறது. தமிழகத்தில் கூட இதுபோன்ற சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. மருத்துவரிடம் உதவியாளராக வேலை செய்துவிட்டு, சில மருந்துகளின் பெயர்களை தெரிந்துகொண்ட பிறகு 'டாக்டர்' என போர்டு மாட்டி, மக்களுக்கு வைத்தியம் பார்த்தவர்கள் ஏராளம். இவ்வளவு ஏன்., ஹோமியோபதி, சித்த மருத்துவம் படித்தவர்களே தன்னை அலோபதி டாக்டர் எனக் கூறி மருத்துவம் பார்த்துள்ளனர். இதில் பலர் உயிரிழந்தும் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, இதுபோன்ற போலி மருத்துவர்களை போலீஸார் தேடி தேடி சென்று கைது செய்தனர். அதன் பிறகு, போலி டாக்டர்கள் மிகவும் குறைந்திருந்தனர்.
சாதாரண காய்ச்சல்..
இந்நிலையில், திருப்பத்தூரில் நடைபெற்ற இதுபோன்ற ஒரு சம்பவம் பல்வேறு சந்தேகங்களை கிளப்பி இருக்கிறது. திருப்பத்தூர் மாவட்டம் அவ்வை நகரைச் சேர்ந்தவர் சதீஷ் (27). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த சூழலில், கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஓய்வுபெற்ற மருத்துவர் சண்முகையா என்பவர் நடத்தி வரும் கிளினிக்குக்கு சதீஷ் சென்றுள்ளார். பிறகு வீட்டுக்கு வந்த சதீஷ், மருத்துவர் கொடுத்த மருந்து, மாத்திரைகளை உட்கொண்டுள்ளார்.
மூளை பாதிப்பு..
மாத்திரைகளை சாப்பிட்டுவிட்டு தூங்கிய சதீஷுக்கு நள்ளிரவில் தாங்க முடியாத தலைவலியும், கடுமையான காய்ச்சலும் ஏற்பட்டுள்ளது. மேலும், அவர் மனநிலை பாதிக்கப்பட்டவரை போலவும் பேசியுள்ளார். இதனால் பயந்துபோன அவரது குடும்பத்தினர், அவரை வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சதீஷுக்கு மூளை பாதிப்பு ஏற்பட்டதாக கூறியுள்ளனர்.
உயிரிழப்பு - மருத்துவர் தலைமறைவு
மேலும், சாதாரண காய்ச்சலுக்கு சதீஷுக்கு வைத்தியம் பார்த்த மருத்துவர் அதிக டோஸ் மாத்திரைகளை கொடுத்திருப்பதாகவும், நரம்பில் 'அவில்' என்ற அலர்ஜிக்கான மருந்தை ஊசி மூலம் செலுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சதீஷ் நேற்று உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உறவினர்கள் சண்முகையாவின் கிளினீக்குக்கு சென்றனர். ஆனால் அவர் அங்கு இல்லை. இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாகியுள்ள மருத்துவர் சண்முகையாவை தேடி வருகின்றனர். அவர் தவறான சிகிச்சை அளித்தாரா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.