திருப்பரங்குன்றம் ரயில்வே மேம்பாலம் திறப்பு: டிசம்பர் முதல் பொதுமக்கள் அனுமதி
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் ரயில்வே மேம்பாலத்தினை முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்சிங் முறையில் திறந்து வைத்தார்.
திருப்பரங்குன்றத்தில் ரூ.19.75 கோடி செலவில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது. இப்பணி ஆண்டுக்கணக்கில் நடந்து வந்தது. 568 மீட்டர் நீளமுடையை இந்த ரயில்வே மேம்பாலம் மதுரை - திருப்பரங்குன்றத்தை இணைக்கிறது.
மதுரையில், பழங்காநத்தம் மற்றும் திருப்பரங்குன்றத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இரண்டு ரயில்வே மேம்பாலங்கள் கட்டப்பட்டு வந்தன.
இந்த நிலையில் கடந்த திங்களன்று திருப்பரங்குன்றம் மேம்பாலத்தினை முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார். திருப்பரங்குன்றத்தில் இதற்கான நிகழ்ச்சியில் மேயர் ராஜன்செல்லப்பா, திருமங்கலம் எம்எல்ஏ முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
மேம்பாலத்தில் 95 சதவிகித பணிகள் நிறைவடைந்துள்ளன. மக்கள் பயன்பாட்டிற்காக டிசம்பர் முதல்வாரத்தில் மேம்பாலம் திறக்கப்படும் என்றும் நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் ரயில்வே லெவல் கிராசிங்கை கடக்க பக்தர்களுக்கும், மாணவர்களுக்கும் மிகவும் சிரமம் ஏற்பட்டது. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
மாலை 6 மணிக்கு மேல் தென் மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் ரயில்கள் கடப்பதால் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் பாலம் செயல்பாட்டுக்கு வரும் பட்சத்தில் இந்த போக்குவரத்து நெரிசல் தீரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல் மாடக்குளம் மற்றும் டி.வி.எஸ் நகர், ஜெய்ஹிந்த் நகர் பகுதியை இணைக்கும் பழங்காநத்தம் மேம்பாலம் அடுத்த ஆண்டுக்குள் கட்டப்பட்டு விடும் என்று நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications