அவதூறு வழக்கு... 24ம் தேதி விஜயகாந்த், பிரேமலதா நேரில் ஆஜராக திருப்பூர் கோர்ட் உத்தரவு
திருப்பூர்: முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், இம்மாதம் 24ம் தேதி விஜயகாந்த், பிரேமலதா நேரில் ஆஜராக திருப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்தாண்டு திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தேமுதிக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், தேமுதிக தலைவர் விஜயகாந்தும், அவரது மனைவி பிரேமலதாவும் கலந்து கொண்டு பேசினர்.
அப்போது முதல்வர் ஜெயலலிதாவை அவர்கள் அவதூறாகப் பேசியதாக, அரசு வழக்குரைஞர் சுப்பிரமணியம் சார்பில் திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி முகமது ஜியாவுதீன், இந்த வழக்கின் விசாரணையை வரும் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
மேலும், அன்றைய தினம் விஜயகாந்த், பிரேமலதா ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.