அட, எதுக்குங்க போட்டியிட்றீங்க..'ஓ'.. வென்று அழுத புஞ்சை புளியம்பட்டி பழனிச்சாமி!!!
திருப்பூர்: திருப்பூர் தொகுதியில் சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்த ஒருவரை செய்தியாளர்கள் கூப்பிட்டு எதுக்குங்க போட்டியிடறீ்ங்க என்று கேட்டபோது அவர் ஓவென்று அழுது விட்டார். இதைப் பார்த்து செய்தியாளர்களே பாவம் குழம்பிப் போய் விட்டனர்.
திருப்பூர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட புஞ்சை புளியம்பட்டியைச் சேர்ந்த எம்.பழனிச்சாமி என்பவர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். இவருக்கு 60- வயதாகிறது.
புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள நொச்சிக்குட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் செயலாளராக பணியாற்றி கடந்த 2011-ஆம் ஆண்டு 31- ஆம் தேதி பணி ஓய்வு பெற்றவராம் பழனிச்சாமி.
மனுத் தாக்கலை முடித்து விட்டு வெளியே வந்த அவரிடம் செய்தியாளர்கள் சில கேள்விகளைக் கேட்டனர். அப்போது பழனிச்சாமி கூறுகையில், மனித உரிமை கழக சர்வதேச அமைப்பின் அரசு ஊழியர் பிரிவு மண்டல அமைப்பாளராக இருக்கிறேன். மகாத்மா மக்கள் கட்சி என்ற பெயரில் வியாழக்கிழமை(இன்று) கட்சியை தொடங்கி இருக்கிறேன்.
அதை இன்னும் பதிவு செய்யவில்லை. இன்றைய அரசியல் கட்சிகளின் நிலை சரியில்லை, அவற்றையெல்லாம் என்னுடைய கட்சியின் மூலம் சரிப்படுத்த வேண்டும் என்றார் பழனிச்சாமி.
அப்போது பார்த்து ஒரு செய்தியாளர், ஏனுங்க தேர்தலில் போட்டியிட முடிவு செஞ்சீங்க என்று எதார்த்தமாக கேட்டு விட்டார். இதைக் கேட்டதும் பழனிச்சாமி பொல பொலவென அழுது விட்டார். இதனால் கேள்வி கேட்ட செய்தியாளருக்கே ஒரு மாதிரியாகி விட்டது.
பழனிச்சாமியை அவருடன் இருந்தவர்கள் தேற்றி ஆறுதல்படுத்தினர். பின்னர் ஒரு வழியாக தொடர்ந்து பழனிச்சாமி பேசுகையில், நான் திருப்பூரில் பிறந்தவன், எனது மகனும் இங்கு தான் பிறந்தார். தேர்தலில் தோற்றாலும், வெற்றி பெற்றாலும் என்னால் முடிந்தளவுக்கு மக்களுக்காக பாடுபடுவேன் என்றார் பழனிச்சாமி.
பின்னர் பழனிச்சாமி அங்கிருந்து புறப்பட்டுப் போனார்.. ஆனால் எதற்காக பழனிச்சாமி அழுதார் என்பது யாருக்குமே இன்னும் புரியலீங்க.. அட எதுக்குங்க அழுதீங்க பழனிச்சாமி.. கடைசி வரை அதுக்குப் பதில் சொல்லவே இல்லீங்ளே..!!!!??












Click it and Unblock the Notifications