சிரியா செல்ல திட்டமிட்ட ஐ.எஸ் தீவிரவாதி மொசுருதீன் - காஷ்மீரில் 20 நாள் தங்கியது அம்பலம்
திருப்பூர்: மேற்கு வங்கத்தில் கைதான திருப்பூரைச் சேர்ந்த ஐஎஸ். தீவிரவாதி மொசுருதீன் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே சிரியாவுக்கு செல்ல திட்டமிட்டதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மொசுருதீன் மற்றும் அவரது மனைவியுடன் காஷ்மீரில் 20 நாள் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியது விசாரணையில் திடுக்கிடும் தகவல் அம்பலமாகியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் பிர்பாம் மாவட்டம் லாப்பூரை சேர்ந்த ஐ.எஸ். தீவிரவாதி மொசுருதீனை, 28 அந்த மாநில குற்றப்புலனாய்வு துறை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கைத்துப்பாக்கி, கத்தி, செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கைதான தீவிரவாதி மொசுருதீன், திருப்பூரில் கடந்த 6 ஆண்டுகளாக மளிகை கடை நடத்தி உள்ளார். மனைவி சாயிரா மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் அவர் வசித்து வந்தார்.
மேலும் திருப்பூரில் மொசுருதீனின் அண்ணன் முகமது லினா சுருதீன் ,30, தம்பி அஸ்துல்லா,23 மற்றும் அவரது நண்பர் ஷானவாஸ், 21 ஆகியோரை புலனாய்வு பிரிவு போலீசார் பிடித்து விசாரித்தனர்.
மேற்கு வங்க மாநில உளவுத்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவுஸ் திருப்பூருக்கு வந்து முசுருதீனின் மனைவி சாயிரா மற்றும் அவரது சகோதரர்கள், நண்பரிடம் விசாரணை நடத்தினார். மேலும் மொசுருதீன் வீட்டில் கைப்பற்றப்பட்ட லேப் டாப், மற்றும் ஆவணங்களையும் பெற்று விசாரித்தார்.
ஏற்றுமதி நகரமான திருப்பூரில் வெளிமாநில தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கான பேர் வேலை பார்த்து வருகிறார்கள். தற்போது கைதான தீவிரவாதி மொசுருதீன் தனது சொந்த ஊரில் இருந்து ஏராளமான வாலிபர்களை திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்கள், சாயப்பட்டறை போன்றவற்றில் வேலைக்கு சேர்ந்து விட்டுள்ளார் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதுபோல் வேலைக்கு சேர்க்கப்படும் வாலிபர்களின் குடும்பத்தினருக்கு மொசுருதீன் பணம் அனுப்பி வைத்துள்ளார். இதனால் இவர் சேர்த்து விட்ட தொழிலாளர்களுக்கும் ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்பு இருக்கலாமோ? என்று புலனாய்வு போலீசார் சந்தேகித்து வருகிறார்கள்.
தீவிரவாதி மொசுருதீன் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பே சிரியா செல்ல திட்டமிட்டு இருந்தார். இதற்காக அவர் கோவையில் பாஸ்போர்ட்டு விண்ணப்பித்து இருந்தார்.
பாஸ்போர்ட் விசாரணைக்காக வந்த போலீசார் மொசுருதீன் வீட்டுக்கு வந்தனர். அப்போது மொசுருதீனிடம் இருப்பிட சான்றிதழ், உள்ளிட்ட ஆவணங்கள் சரியாக இல்லாததால் போலீசார் அவரது பாஸ்போர்ட்டு விசாரணையை நிராகரித்து அனுப்பி விட்டனர்.ஒரு வேளை பாஸ்போர்ட்டு மட்டும் மொசுருதீனுக்கு கிடைத்து இருந்தால் அவர் சிரியாவில் உள்ள தீவிரவாதத்தில் சேர்ந்து இருக்க வாய்ப்புள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையே மேற்கு வங்கத்தில் கைது செய்யப்பட்ட மொசுருதீனை குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் கவுரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 14 நாட்கள் காவலில் எடுத்து ரகசிய இடத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மொசுருதீன் மற்றும் அவரது மனைவியுடன் காஷ்மீரில் 20 நாள் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியது தெரியவந்தது. இதுகுறித்து அவரது மனைவியிடம் விசாரணை மெற்கொண்டபோது, அதனை அவர் ஒத்துக்கொண்டதாக போலீசார் கூறினர். காஷ்மீரில் ஏன் தங்கினார் என்று தீவிரவாத தடுப்பு குற்றப் புலனாய்வுத் துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
தற்போது தீவிரவாதி மொசுருதீனை திருப்பூருக்கு அழைத்து வர புலனாய்வு போலீசார் திட்டமிட்டு உள்ளார்கள். திருப்பூரில் அவருடன் நெருங்கிய தொடர்பு வைத்தவர்கள் யார்? யார்- யாருக்கு பணம் அனுப்பியுள்ளார். அவர் மூலம் பல்வேறு கம்பெனிகளில் வேலைக்கு சேர்ந்த நபர்கள் யார்? என்பது பற்றி விசாரிக்க முடிவு செய்துள்ளனர். இதனால் தீவிரவாதி மொசுருதீன் விவகாரத்தில் அடுத்தடுத்து பரபரப்பான தகவல்கள் வெளியாக வாய்ப்பு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications