திருப்பூர் பின்னலாடை நிறுவனத்தில் 11 குழந்தை தொழிலாளர்கள் – அதிகாரிகளால் மீட்பு
திருப்பூர்: திருப்பூர் பனியன் கம்பெனியில் கொத்தடிமைகளாக வேலை பார்த்துவந்த 11 சிறுவர்கள் மீட்கப்பட்டதுடம் அந்நிறுவன உரிமையாளரும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர் நகரில் கொங்கு பிரதான சாலை, முத்து நகர் விரிவுப் பகுதியில் கடலூரை சேர்ந்த சிவக்குமார் என்பவர் பின்னலாடைகளுக்கான துணை நிறுவனம் நடத்தி வருகிறார்.

இவரது நிறுவனத்தில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 11 சிறுவர், சிறுமியர்களை முறைகேடாக பணியில் ஈடுபடுத்தி வருவதாகவும், இச்சிறுவர்களுக்கு போதுமான தங்கும் வசதி, உணவு அளிக்கப்படாமல் அதிகப்படியான நேரம் பணியில் அவர்கள் ஈடுபடுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜுக்கு தகவல் கிடைத்தது.
இதுகுறித்து, நடவடிக்கை மேற்கொள்ளும்படி மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் அசோக்குமாருக்கு உத்தரவிட்டார். அவரது தலைமையில் தொழிற்சாலைகள் துறை, குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புத் திட்ட அலுவலர்கள், சைல்டு லைன் ஊழியர்கள், காவல்துறையினருடன் சென்று அந்நிறுவனத்தில் ஆய்வு செய்தனர்.
அப்போது, 4 சிறுமிகள் உள்பட 11 சிறுவர்கள் ஒரே அறைக்குள் அடைத்து வைக்கப்பட்டு, அவர்கள் அதிகப்படியான நேரம் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வந்ததுடன், துன்புறுத்தப்பட்டு வந்ததாகவும் கண்டறியப்பட்டது.
14 வயது முதல் 18 வயதுக்கு உள்பட்ட இந்த சிறுவர்களை பணியில் ஈடுபடுத்த, சட்டப்படி தொழிலாளர் நலத்துறையில் பெற வேண்டிய சான்றையும் அந்நிறுவனம் பெற்றிருக்கவில்லை என விசாரணையில் தெரியவந்தது.
பிறகு, அச்சிறுவர்கள் மீட்கப்பட்டு, அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்ட பின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். மேலும், அவர்களை கடலூர் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலகம் மூலமாக சிறப்புப் பள்ளியில் சேர்த்து மீண்டும் படிக்க வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, உரிய பதிவுச்சான்றுகள் பெறாமல் சிறுவர்களை பணியமர்த்தியதாக அந்நிறுவன உரிமையாளர் சிவக்குமார் மீது மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் அசோக்குமார் திருப்பூர் வடக்கு மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்திய குற்றத்துக்காக சிவக்குமாரை கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications