திருப்பூர் சிவன்மலையில் இரும்புச் சங்கிலிக்குப் பூஜை - "முக்கிய பிரமுகர்" கைதாவார் என பரபரப்பு!
திருப்பூர் அருகே உள்ள சிவன்மலை கோவிலில் இரும்பு சங்கிலி வைத்து பூஜை செய்யப்படுகிறது. இதனால் பிரபலமாக இருக்கும் ஒருவர் கைதாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருப்பூர் : காங்கயம்-திருப்பூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது இந்த சிவன்மலை. இந்த மலை மீது சுப்ரமணியசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள இறைவன் பக்தரின் கனவில் வந்து உத்தரவிடும் பொருளை வைத்து பூஜை செய்வது ஐதீகம்.
பக்தரின் கனவில் வந்து, தான் விரும்பும் ஒரு பொருளை சொல்வார். அந்த பொருளை, கோயிலில் இருக்கும் பெட்டியில் வைத்து பூஜை செய்வார்கள். இதனையடுத்து அந்த பொருளால் மிகப்பெரிய நன்மையோ, தீமையோ ஏற்படும்.
கடவுள் உத்தரவு
தண்ணீரை வைக்கச் சொல்லி உத்தரவு வந்தால், அந்த காலகட்டத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். அல்லது பஞ்சம் தீர்ந்து பெருவெள்ளம் ஏற்படும். 2004ஆம் ஆண்டு தண்ணீரை வைக்கச்சொல்லி உத்தரவு வந்தபோதுதான் சுனாமி ஏற்பட்டதாம்.
பக்தர்களின் கனவில் கடவுள்
முன்பு ஒரு பக்தரின் கனவில் வந்து மண் வைத்து பூசை செய்ய உத்தரவு வந்தது. அப்போதிலிருந்து இந்த பகுதியைச் சுற்றி நிலத்தின் மதிப்பு நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்துவிட்டது என்கின்றனர் உள்ளூர்வாசிகள்.
உத்தவு பெட்டி
கடந்த சில ஆண்டுகளாகவே சிவன் மலை கோவிலில் உத்தரவு பெட்டியில் வைத்து சர்க்கரை, அரிசி, தண்ணீர், பென்சில், கோனார் தமிழ் உரை நோட்ஸ், வேட்டி, துண்டு, பால், மோர், உப்பு, அச்சுவெல்லம், துளசி இலைகளும் கூட வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது.
மஞ்சள் விலை உயர்வு
மஞ்சள் வைக்கச்சொல்லி உத்தரவு வந்தது. அந்த நேரத்தில்தான் மஞ்சள் தங்கத்தின் விலையை விட அதிக அளவுக்கு மார்க்கெட்டில் விற்பனையானது.
அதன்படி இப்போது இரும்புச் சங்கிலியை வைத்து வழிபடச் சொல்லி உத்தரவு வந்திருக்கிறது.
இரும்பு சங்கிலி
இதையடுத்து சிவன்மலை கோயிலில் இரும்புச்சங்கிலி கடந்த 10ஆம் தேதி முதல் வைத்து பூஜை செய்யப்படுகிறது. அந்த கோவிலில் ஆண்டவன் உத்தரவு என்று எழுதப்பட்ட ஒரு பெட்டி உள்ளது. இந்த பெட்டியில் இரும்பு சங்கிலியை வைத்து எந்த பக்தரின் கனவில் வந்து கடவுள் உத்தரவிட்டார் என்றும் எழுதப்பட்டுள்ளது.
முக்கிய பிரமுகர்கள் கைது
இப்போது இரும்புச் சங்கிலி வந்திருப்பதால், நாட்டில் உள்ள முக்கிய பிரமுகர்கள் வழக்குகளில் சிக்கி, கைது செய்யப்படுவார்கள் என்று பீதி கிளப்புகின்றனர். இப்படி ஒரு பக்கம் கூறினாலும், இரும்பு சங்கிலி வைக்கப்பட்டதால் நாட்டில் குற்றச் செயல்கள் அதிகரிக்கும். இதனால் குற்றவாளிகள் அதிக அளவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் கூறுகின்றனர்.