தமாகாவில் இன்று முதல் விருப்ப மனு தாக்கல்: 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் கிடைப்பார்களா?
சென்னை: த.மா.கா. சார்பில் வருகிற சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்பமனு இன்று முதல் வருகிற 12ம் தேதி வரை பெறப்படுகிறது. 234 தொகுதிகளுக்கும் விருப்பமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மயிலாப்பூர் தொகுதியில் ஜி.கே.வாசன் போட்டியிட கோரி ஏராளமானோர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர்
சட்டசபை தேர்தலுக்கு அரசியல் கட்சியினர் தயாராகி வருகின்றனர். அதிமுக, திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் தங்கள் கட்சியினரிடம் இருந்து விருப்பமனு பெற்று அதன் பேரில் பல கோடி ரூபாய் வசூல் செய்துள்ளன. இந்த நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியினரும் இன்று முதல் விருப்பமனு அளிக்கலாம் என்று அறிவித்து அதற்கான விண்ணப்பங்களையும் விநியோகம் செய்து வருகின்றனர்.
தமிழ் மாநில கட்சி சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட அலுவலகங்களில் விருப்ப மனு பெறப்படுகிறது. சென்னையில் கட்சி நிர்வாக வசதிக்காக சென்னை மாவட்டத்தை 8 மாவட்டங்களாக பிரித்து உள்ளனர்.

சென்னையில்
இந்த 8 மாவட்டங்களுக்கும் தேனாம்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. இதற்காக 8 கவுன்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அந்தந்த மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அந்த மாவட்டங்களுக்கு உட்பட்ட தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு கொடுக்கலாம்.

ஜி.கே.வாசனுக்கு மனு
ஜி.கே.வாசன் போட்டியிட விருப்பம் தெரிவித்து அவரது பெயரில் மனு கொடுத்தனர். மாவட்ட தலைவர்கள் இல.பாஸ்கரன் கொட்டிவாக்கம் முருகன், ஈசிசேகர், ஜி.ஆர்.கதிரவன், பிஜு.சாக்கோ, ராஜ்குமார், அருண்குமார் ஆகியோர் விருப்ப மனுக்களை பெற்றனர். தலைமை நிலைய செயலாளர் டி.எம்.பிரபாகர் அண்ணாநகர் தொகுதியில் போட்டியிட மனு செய்தார். மேலும் அவர் அண்ணாநகர், ஆயிரம்விளக்கு தொகுதிகளில் ஜி.கே.வாசன், ஞானதேசிகன் பெயரில் போட்டியிடவும் மனு செய்தார்.

மயிலாப்பூரில் போட்டி
மயிலாப்பூரில் ஜி.கே.வாசன் போட்டியிட ராம அருண் என்பவரும், அண்ணாநகர், புரசைவாக்கம் ஆகிய தொகுதிகளில் வாசன் பெயரில் அனுராதா அபியும் மதுரவாயல் தொகுதியில் ஜி.கே.வாசன் போட்டியிட தென் சென்னை மேற்கு மாவட்ட தலைவர் இ.சி.சேகரும் மனு தாக்கல் செய்தனர். சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி மற்றும் வேளச்சேரி, ஆயிரம் விளக்கு தொகுதிக்கு ஜி.கே.வாசன் பெயரில் தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ் மனுதாக்கல் செய்தார். மயிலாப்பூர் தொகுதியில் ஜி.கே.வாசன் போட்டியிட தென் சென்னை கிழக்கு மாவட்ட எஸ்.சி.எஸ்.டி. பிரிவு தலைவர் மயிலை சிவகுமார் விருப்பமனு தாக்கல் செய்தனர்.

234 வேட்பாளர்கள் கிடைப்பார்களா?
சட்டசபை தேர்தலில் தன்னுடைய நிலைப்பாடு என்ன என்பது பற்றி இதுவரை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித்தலைவர் ஜி. கே.வாசன் அறிவிக்கவில்லை. கூட்டணியா? தனித்து போட்டியா என்று தெரிவிக்காத நிலையில் 234 தொகுதிகளிலும் போட்டியிட விரும்புபவர்கள் மனு அளிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஒருவேளை தமாகா தனித்து போட்டியிட்டால் 234 வேட்பாளர்கள் கிடைப்பார்களா?












Click it and Unblock the Notifications