தேர்தலுக்குள் தமாகா என்ற கட்சியே காணாமல் போய்விடும்: ஈ.வி.கே.எஸ்.
சென்னை: வரும் சட்டசபை தேர்தலுக்குள் தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சியே காணாமல் போய்விடும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வரும் சட்டசபை தேர்தலில் தேமுதிக, மக்கள் நலக் கூட்டணியுடன் சேர்ந்து தேர்தலை சந்திக்கிறது. இதனால் அதிருப்தியடைந்த அக்கட்சியின் மூத்த தலைவர்களான பீட்டர் அல்போன்ஸ், எஸ்.ஆர். பாலசுப்ரமணியம் ஆகியோர் தமாகாவில் இருந்து விலகினர். பீட்டர் அல்போன்ஸ் தாய் கட்சியான காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். எஸ்.ஆர். பாலசுப்ரமணியம் ஜெயலலிதாவை நேற்று போயஸ்கார்டனில் சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

இந்நிலையில் தமாகாவைச் சேர்ந்த பலர் காங்கிரஸில் இணையும் நிகழ்ச்சி சத்தியமூர்த்தி பவனில் இன்று நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த இளங்கோவன் கூறுகையில், தமாகாவில் மீதமுள்ளவர்களும் சோனியாகாந்தி, ராகுல்காந்தி தலைமையே ஏற்று விரைவில் காங்கிரஸில் இணைவர். தேர்தலுக்குள் தமாகா என்ற கட்சியே காணாமல் போய்விடும்.
கரூரில் கோடிக்கணக்கில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதே போல் அனைத்து மாவட்டங்களிலும் கோடிக் கணக்கில் பணத்தை பதுக்கி வைத்து உள்ளனர். எந்த தேர்தலிலும் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. ரூ.500 கோடிக்கு பணம் பதுக்கப்பட்டு உள்ளது. தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுத்து பணத்தைப் பறிமுதல் செய்ய வேண்டும்.
திமுக தலைவர் கருணாநிதி, திருவாரூரில் திங்கள்கிழமை பிரசாரம் செய்கிறார். அதில் நானும் கலந்து கொள்கிறேன். காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ஏப்ரல் 26 அல்லது 27-ஆம் தேதி வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications