எங்க கவனமெல்லாம் 2016ல்தான்.. ஸ்ரீரங்கத்தில் போட்டியிடவில்லை... ஜி.கே.வாசன் அறிவிப்பு
சென்னை: ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடவில்லை என்று அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்து விட்டார். அத்தோடு இந்தத் தேர்தலில் எந்த வகையிலும் தனது கட்சி பங்கேற்காது என்றும் அவர் கூறி விட்டார். இதனால் தேர்தல் களத்திலிருந்து தமாகா நீங்கியுள்ளது.
கடந்த ஆண்டு இறுதியில் காங்கிரஸ் மேலிடத்துடன் மோதல் கொண்டு பிரிந்து வந்து தமாகாவை தொடங்கினார் ஜி.கே.வாசன். இந்த நிலையில் ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல் வந்துள்ளது. இதில் வாசன் கட்சி போட்டியிடுமா, யாருக்காவது ஆதரவு தருமா அல்லது ஒதுங்கியிருந்து வேடிக்கை பார்க்குமா என்ற கேள்விகள் எழுந்து வந்தன. தற்போது அக்கட்சி ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கப் போவது உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து வாசன் விடுத்துள்ள அறிக்கை:
ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதியில் இடைத்தேர்தலுக்கு தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் பங்கேற்பதைப் பற்றி கட்சிக்குள் கருத்துக்களை கடந்த சில நாட்களாக நாங்கள் கேட்டறிந்தோம்.
தமிழகத்தில் 2001 ம் ஆண்டு முதல் கடந்த 13 ஆண்டுகளில் 21 இடைத்தேர்தல்கள் நடந்திருக்கின்றன. 2001 ம் ஆண்டு முதல் 2006 ம் ஆண்டு வரை 5 தொகுதிகளுக்கு நடைபெற்ற 5 இடைத்தேர்தல்களிலும், 2006 ம் ஆண்டு முதல் 2011 ம் ஆண்டு வரை 11 தொகுதிகளுக்கு நடைபெற்ற 11 இடைத்தேர்தல்களிலும் 2011 முதல் இதுவரை 5 இடைத்தேர்களிலும் ஆளுங்கட்சிகள் தான் வெற்றிப்பெற்றுள்ளன என்பதை கடந்த காலத் தேர்தல்கள் சுட்டிக்காட்டுகிறது.
தேர்தலில் பங்கேற்பது என்பது ஒரு அரசியல் கட்சியின் தலையாய கடமையாகும். இடைத் தேர்தல் என்பது ஆளுகின்ற கட்சியினுடைய நிலைப்பாடுகள் மற்றும் செயல்பாடுகளை கணிக்கின்ற தேர்தலாக இருக்கின்ற காலகட்டம் போய், இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சிதான் வெற்றி பெற முடியும் என்ற நிலைப்பாடு தமிழ்நாட்டில் நிலவி வருகிறது.
தமிழக இடைத்தேர்தலில், குறிப்பாக வாக்காளர்களைச் சந்திப்பது என்பதற்கு பதிலாக வாக்குகளுக்கு விலை பேசுவது என்கின்ற வழிமுறையே அரங்கேறி இருக்கிறது. தேர்தல்களில் பண பலம், ஆள்பலம், அதிகார பலம் போன் றவை வெற்றி தோல்வியை நிர்ணயிக்காமல் அரசியல் கட்சிகளின் லட்சியங்களும், கொள்கைகளும், வேட்பாளர்களின் தகுதியும், மட்டுமே வெற்றி தோல்வியை நிர்ணயிக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கருதுகிறது.
அத்தகைய சூழ்நிலையை தமிழகத்தில் ஏற்படுத்த தமிழ் மாநில காங்கிரஸ் ஒரு வலுவான அரசியல் அடித்தளத்தை உருவாக்க நினைக்கின்றது. அத்தகைய இயக்கக் கட்டுமானப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறது.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தொடங்கி இரண்டு மாதங்களே ஆனநிலையில் உறுப்பினர் சேர்க்கையிலும், கட்சியின் வலிமையை பெருக்குவதிலும் மற்றும் 2016 பொதுத் தேர்தலை கருத்தில் கொண்டும் எங்கள் இயக்கப் பணி நடக்கிறது.
இடைத்தேர்தல்களில் அரசியல் கட்சிகள் பங்கேற்காமல் இருப்பது என்பது புதிதல்ல. இவைகளையெல்லாம் கருத்தில் கொண்டு ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் எந்த விதத்திலும் தமிழ் மாநில காங்கிரஸ் பங்கேற்பது இல்லை என்ற முடிவை நாங்கள் எடுத்திருக்கின்றோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜி.கே.வாசன்.