தமுமுக, தேவர் பேரவை மோதல்: இரு தரப்பும் பேசி அமைதி காத்து பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி!
சென்னை: தாம்பரத்தில் நேற்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் மற்றும் தேவர் பேரவைக்கு இடையிலான மோதலால் அப்பகுதியே பதட்டமாகக் காணப்பட்டது.
நேற்று, தாம்பரத்தில் தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினைச் சேர்ந்தவர்களான சாகுல், அப்துல், அன்சாரி ஆகியோரை மர்மக் கும்பல் ஒன்று, பயங்கர ஆயுதங்களால் தாக்கியது. இந்தக் கொலை வெறி தாக்குதலில் தாம்பரம் காவல்துறை ஆய்வாளரான செல்லப்பாவும் படுகாயமடைந்தார். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது பதில் தாக்குதல் நடந்ததில் அவர்கள் தரப்பிலும் 4 பேர் காயமடைந்தனர்.
இந்த மோதலுக்கு பின்னணியில் தேவர் பேரவையினர், தமுமுகவைச் சேர்ந்தவர்களுக்கு இருந்த முன்பகை தான் காரணம் என்று தெரிகிறது.
இந்நிலையில் மேலும் கலவரம் ஏற்படாமல் தடுக்கவும், இத்தாக்குதலினால் ஏற்பட்ட பதட்டத்தினாலும் கிட்டதட்ட 400க்கும் மேற்பட்ட போலீசார் தாம்பரத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது, இருதரப்பிலும் மூத்த பிரதிநிதிகள் தலையிட்டு, சமரச பேச்சு வார்த்தை நடத்தி, இப்பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு கண்டுள்ளனர். இதனையடுத்து தாம்பரம் பகுதியில் அமைதியான சூழல் திரும்பி உள்ளது.