ராஜபக்சே வருகை.. தமிழகம் முழுவதும் உணர்ச்சிப் பெருக்குடன் போராட்டங்கள்!
சென்னை: தமிழ் இனப் படுகொலையாளன் ராஜபக்சே மோடி பதவியேற்புக்கு வருகை தந்துள்ளதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் உணர்ச்சிப் பெருக்குடன் பல்வேறு அமைப்புகளின் சார்பில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
மே 17 இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னையில் நடத்தப்பட்டது. பெரும் திரளானோர் இதில் பங்கேற்று, ராஜபக்சேவுக்கும், பிரதமராக பதவியேற்கும் நரேந்திர மோடிக்கும் எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடைப்பிடித்த கொள்கையையே தற்போது பாஜகவும் தொடர்வதாக மே 17 இயக்கத்தினர் குற்றம்சாட்டினர். இதே நிலை தொடருமானால் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட நிலையே பாஜகவிற்கும் ஏற்படும் என்று எச்சரிக்கைவிடுத்தனர்.

அதேபோல சட்டக் கல்லூரி மாணவர்கள் பலர் திருவள்ளூரில் ரயில் மறியல் போராட்டம் நடத்திக் கைதானார்கள். ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை 8.25 மணிக்கு திருவள்ளூர் ரயில் நிலையம் வந்தது. அப்போது திடீரென்று சட்டக்கல்லூரி மாணவர்கள் சிலர் ராஜபக்சேவுக்கு எதிராக கோஷம் எழுப்பிய படி ரயிலை நோக்கி ஓடினார்கள்.
ரயில் என்ஜின் மீது ஏறி நின்றபடி போகவிடாமல் மறித்தனர்.ராஜபக்சேவுற்கு அழைப்புவிடுத்த மோடிக்கு எதிராகவும் அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். சர்வதேச விசாரணைக்கு ராஜபக்சே ஒத்துழைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இல்லாவிட்டால் இலங்கை தூதரகத்தை மூடக்கோரும் போராட்டத்தில் ஈடுபடபோவதாகவும் எச்சரித்தனர்
இந்தப் போராட்டம் காரணமாக ரயில் கால் மணி நேரம் தாமதமாக போனது. இதேபோல தமிழகத்தின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்துள்ளன.
சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் வீட்டை முற்றுகையிடும் போராட்டமும் நடத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications