தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்ரவரி 17-ந் தேதி தொடக்கம்!
சென்னை: தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடரை வரும் 17-ந் தேதி கூட்டுவது என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக முதல்வராகப் பதவியேற்ற பின்னர் ஓ.பன்னீர்செல்வம் 2வது முறையாக இந்த அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டினார்.
இந்த கூட்டத்தில் சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் பற்றி ஆலோசிக்கப்பட்டது. இதில் கலந்து கொள்வதற்காக ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பிரசாரத்துக்காக முகாமிட்டிருந்த அமைச்சர்களும் சென்னை திரும்பினர்.

இந்த கூட்டத்துக்குப் பின்னர் வரும் 17-ந் தேதி தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஆண்டின் முதலாவது கூட்டம் என்பதால் பிப்ரவரி 17-ந் தேதியன்று காலை 10.45 மணிக்கு தமிழக ஆளுநர் ரோசைய்யா சட்டசபையில் உரை நிகழ்த்துவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய அமைச்சரவைக் கூட்டத்திலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா புகைப்படத்தை தமது மேஜை முன்பாக வைத்தபடி, மிகவும் சோகமாகவே அமர்ந்திருந்தார் முதல்வர் பன்னீர்செல்வம்.
சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 100 கோடி அபராதமும் விதிக்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து தனது எம்.எல்.ஏ. மற்றும் முதல்வர் பதவியை அவர் இழந்தார்.
இதனால் தமிழகத்தின் முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் கடந்த செப்டம்பர் மாதம் பதவியேற்றுக் கொண்டார். அவர் பதவியேற்ற பின்னர் அக்டோபர்-நவம்பரில் தமிழக சட்டசபையின் குளிர்காலக் கூட்டத்தொடரை நடத்தியிருக்க வேண்டும்.
அதுவும் புதிய முதல்வர் தலைமையிலான அமைச்சரவை என்பதால் ஆளுநர் உரையுடன் அக் கூட்டத்தொடரை நடத்தியிருக்க வேண்டும். ஆனால் அப்படி குளிர்காலக் கூட்டத் தொடரை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூட்டவில்லை. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க டிசம்பர் மாதம் 4-ந் தேதியன்று 3 நாள் குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்பட்டது.
இந்நிலையில் தற்போது பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 17-ந் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த குளிர்கால கூட்டத் தொடரைப் போல இம்முறையும் குறுகிய காலமே பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறுமா? அல்லது வழக்கம் போல அதிக நாட்கள் நடைபெறுமா? என்பதுதான் எதிர்க்கட்சிகளின் எதிர்பார்ப்பு.












Click it and Unblock the Notifications