தமிழக சட்டசபை ஜூலை 22ல் கூடுகிறது?
சென்னை: தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வரும் 22ம்தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் நாளில், முன்னாள் அமைச்சர் செந்தூர்பாண்டியன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கூட்டம் ஒத்தி வைக்கப்படும். தொடர்ந்து துறை ரீதியான மானியக்கோரிக்கைக்கள் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெறும்.
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 17ம்தேதி தமிழக ஆளுநர் ரோசையா உரையுடன் தொடங்கியது. அதை தொடர்ந்து, 18ம்தேதி நடைபெற்ற சட்டசபைக் கூட்டத்தில் மறைந்த 6 எம்.எல்.ஏ.க்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் தொடங்கியது.பிப்ரவரி 23ம்தேதி வரை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. அனைத்துக் கட்சிகளும் இந்த விவாதத்தில் பங்கேற்றனர். விவாதத்துக்கு அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பதில் அளித்து பேசினார். சட்டமுன் வடிவுகளும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
மார்ச் 25ல் பட்ஜெட்
கடந்த மார்ச் 25ம்தேதி சட்டசபை மீண்டும் கூடியது. இதில் அன்றைய முதல்வராக இருந்த நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 2015-16ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 1ம்தேதி வரை நடந்தது. பட்ஜெட் விவாதத்துக்கு ஏப்ரல் 1ம்தேதி ஓ.பன்னீர் செல்வம் பதில் அளித்து பேசினார். மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்படாமலேயே சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டது.
மானியக் கோரிக்கை தாக்கல்
வழக்கமாக மே மாதம் வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் இந்த ஆண்டு ஏப்ரல் 1ம்தேதியுடன் சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டதால் துறை ரீதியான மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.
எதிர்கட்சிகள் கேள்வி
கடந்த மே 23ம் தேதி மீண்டும் முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்றுள்ளார். கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேலாகியும் சட்டசபை கூட்டம் எப்போது நடைபெறும் என்று அறிவிக்கப்படவில்லை. இதனையடுத்து சட்டசபையில் துறை ரீதியான மானியக்கோரிக்கை மீதான விவாதம் எப்போது நடைபெறும் என்று எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பினர்.
ஜூலை 22ல் கூட்டம்
இந்த நிலையில், வருகிற 22ம்தேதி அல்லது 23ம்தேதி சட்டசபை மீண்டும் கூடும் என்று தெரிகிறது. முதல் நாளில், முன்னாள் அமைச்சர் செந்தூர்பாண்டியன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கூட்டம் ஒத்தி வைக்கப்படும்.அதன்பிறகு தினமும் ஒவ்வொரு துறை சார்பிலும் மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்படும்.
மானியக் கோரிக்கை விவாதம்
விவாதத்துக்கு பிறகு அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள்.புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும். பின்னர் அவை நிறைவேற்றப்படும். இந்த கூட்டத்தொடர் 2 வாரகாலம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.