ஆளுநர் உரையுடன் நாளை கூடுகிறது சட்டசபை... 6 தேமுதிக எம்.எல்.ஏக்கள் பங்கேற்க முடியாது
சென்னை: சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் நாளை ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பின்னர் விவாதம் நடைபெறும். நான்கு நாட்கள் இந்தக் கூட்டத் தொடர் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்டுதோறும் சட்டசபையின் முதல் கூட்டத் ஜனவரியில் நடைபெறும். தவறினால் பிப்ரவரி முதல் வாரத்தில் நடைபெறும். முதல் கூட்டம் என்பதால் இதில் ஆளுநர் உரையுடன் கூட்டம் தொடங்கும்.
இந்த ஆண்டுக்கான சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. தொடக்கமாக ஆளுநர் ரோசய்யா உரையாற்றுகிறார். இதற்கான அறிவிப்பாணையை தமிழக சட்டசபையின் செயலாளர் அ.மு.பி.ஜமாலுதீன் கடந்த 11ம் தேதி வெளியிட்டார். அதன்படி நாளை சட்டசபை கூடுகிறது. காலை 10.30 மணிக்கு ஆளுநர் உரை நிகழ்த்துகிறார்.
ஆங்கிலத்தில் ஆளுநரின் உரை இடம் பெறும். பின்னர் சபாநாயக் தனபால் தமிழாக்கத்தை வாசிப்பார். அத்தோடு நாளைய நிகழ்ச்சி முடிவுக்கு வரும்.

அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம்
அதன் பின்னர் இந்தக் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதுபற்றி சபாநாயகர் ப.தனபால் தலைமையில் நாளை நடக்கும் அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

நன்றி தெரிவிக்கும் தீர்மானம்
அடுத்த நாள் சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அதன் மீது உறுப்பினர்கள் விவாதம் நடத்துவார்கள். அந்த விவாதத்திற்கு இறுதியில் முதல்வர் ஜெயலலிதா பதிலளித்து உரையாற்றுவார்.

4 நாட்கள் நடக்கலாம்
நாளை தொடங்கும் இந்த சட்டசபைக் கூட்டத் தொடர் நான்கு நாட்கள் நடைபெறலாம் என்று தெரிகிறது.

பரபரப்புக்கா பஞ்சம்!
வழக்கம் போல இந்தக் கூட்டத் தொடரிலும் பரபரப்புக்குப் பஞ்சம் இருக்காது. மழை வெள்ளம், மழை நிவாரணப் பணிகள், செம்பரம்பாக்கம் ஏரி விவகாரம், சட்டம்-ஒழுங்கு போன்ற பல பிரச்சினைகளுடன் எதிர்க்கட்சிகள் காத்துக் கொண்டுள்ளன.

தேமுதிக?
இந்தக் கூட்டத் தொடரில் தேமுதிக உறுப்பினர்களில் 6 பேர் கலந்து கொள்ள முடியாத நிலை நிலவுகிறது. கடந்த ஆண்டு நடந்த கூட்டத் தொடரில் தேமுதிக எம்.எல்.ஏ.க்களை அவைக்காவலர்கள் வெளியேற்றிய போது கடுமையான தள்ளுமுள்ளு நேரிட்டது. எனவே தேமுதிக எம்.எல்.ஏ.க்களை (அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தவிர) அவையில் இருந்து ஒரு கூட்டத் தொடர் முழுவதும் நீக்கி வைக்கும்படி தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

அது போன கூட்டத் தொடர்
ற்போது அந்தக் கூட்டத் தொடர் முடிந்து விட்டது. ஆனால் ஆர்.மோகன்ராஜ், வி.சி.சந்திரகுமார், கே.தினகரன், சி.எச்.சேகர், எஸ்.ஆர்.பார்த்திபன், எல்.வெங்கடேசன் ஆகிய 6 பேரும், ஒரு கூட்டத் தொடர் மற்றும் இரண்டாவது கூட்டத்தொடரில் 10 நாட்கள் கூடுதலாக பங்கேற்க முடியாது என்று தீர்மானிக்கப்பட்டது. அவை உரிமைக் குழு விசாரணையும் நடத்தப்பட்டது. எனவே நாளை தொடங்கும் கூட்டத்தொடரின் முதல் 10 நாட்களுக்கு இந்த 6 பேரும் பங்கேற்க முடியாது.

விஜயகாந்த் வரலாம்.. வருவாரா?
தேமுதிக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவரான விஜயகாந்த் இந்தக் கூட்டத் தொடரில் தாராளமாக கலந்து கொள்ள முடியும். மக்கள் பிரச்சினைகளை எழுப்ப முடியும். பேச முடியும். ஆனால் இதையெல்லாம் அவர் செய்வாரா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.












Click it and Unblock the Notifications