வரும் ஜூன் 16-ல் கூடுகிறது தமிழக சட்டசபை.. ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது
சென்னை: தமிழக சட்டசபை ஜூன் 16-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளதாக பேரவை செயலாளர் ஜமாலுதீன் அறிவித்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் கடந்த மாதம் 25-ம் தேதி பதவியேற்றனர். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் செம்மலை பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இதையடுத்து நேற்று மீண்டும் சட்டசபை கூடியது. அப்போது, சபாநாயகராக தனபாலும், துணை சபாநாயகராக பொள்ளாச்சி ஜெயராமனும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதையடுத்து சபாநாயகராக பொறுப்பேற்ற தனபால், சட்டப்பேரவையை வரும் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இந்நிலையில், 15-வது சட்டப்பேரவையின் அடுத்த கூட்டம் ஜூன் 16-ம் தேதி தொடங்க உள்ளதாகவும், அன்று காலை 11 மணிக்கு ஆளுநர் ரோசய்யா உரை நிகழ்த்த உள்ளதாகவும் சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் அங்கீகரிக்கப்பட்டிருப்பதாகவும் பேரவை செயலாளர் ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.