தமிழக சட்டசபையின் இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்.20 வரை நடைபெறும்: சபாநாயகர் தனபால்
சென்னை: தமிழக சட்டசபையின் இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்ரவரி 20-ந் தேதி வரை நடைபெறும் என்று சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையின் இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இதுதான் ஆளும் அதிமுக அரசின் இறுதி சட்டசபை கூட்டத் தொடர்.
இன்றைய கூட்டத்தில் புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லாத இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இருப்பினும் அத்திக்கடவு-அவிநாசி திட்டம் தொடங்கப்படும் என அவர் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இன்றைய கூட்டம் நிறைவடைந்தது. இதன் பின்னர் கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூடி விவாதித்தது.
இக்கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் தனபால், வரும் 20-ந் தேதி வரை பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும். நாளை காலை 10 மணிக்கு சபை கூடியதும் இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்படும். அதன் பின்னர் பொதுவிவாதம் நடைபெறும்.
சபை நடைபெறும் 4 நாட்களும் கேள்வி பதில் இடம்பெறும். பட்ஜெட் மீதான நிதி அமைச்சரின் பதில் உரை வரு 20-ந் தேதி இடம்பெறும் என்றார்.