பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை: முதல்வர் ஓ.பி.எஸ் அறிவிப்பு
சென்னை: உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டு தடை விதித்து தீர்ப்பளித்துள்ள சூழ்நிலையில், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி இந்த ஆண்டு நடைபெறுவதற்கு இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருவதாக தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை:
உச்சநீதிமன்றத்தின் இந்த ஆணை ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதை முற்றிலும் தடை செய்து விட்டதால், இதனை எதிர்த்து 19.5.2014 அன்று தமிழ்நாடு அரசால் மறு ஆய்வு மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மறு ஆய்வு மனு இன்னமும் நிலுவையில் உள்ளது.

மறு சீராய்வு மனு
உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டதோடு, அது குறித்த பல்வேறு நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசும், தமிழக அரசின் உயர் அதிகாரிகளும் கடந்த பல மாதங்களாக எடுத்து வருகின்றனர். மத்திய அரசினை தொடர்பு கொண்டு, மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட அறிவிக்கையிலிருந்து காளையை நீக்கம் செய்ய தொடர் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு
மேலும் டெல்லியில் உள்ள தமிழக அரசின் வழக்கறிஞர்களை தொடர்பு கொண்டு, தமிழக அரசால் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுவினை விரைவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதிய அரசாணை
7.1.2015 அன்று தமிழக அரசின் உயர் அதிகாரிகள் மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சக உயர் அலுவலர்களை நேரில் சயதித்து, மத்திய அரசால் 11.7.2011 அன்று வெளியிடப்பட்ட அரசிதழில் ‘காளைகளை' நீக்கும்படி வற்புறுத்தப்பட்டது. மத்திய அரசு அலுவலர்கள் துறை அமைச்சருடன் விவாதித்து அவ்வாறான அறிவிக்கையை வெளியிடுவதாக நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

சட்டத்தில் திருத்தம்
மேலும், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதற்கு ஏதுவாக 1960 ஆம் ஆண்டைய இந்திய பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்தில் உரிய சட்ட திருத்தங்களை மேற்கொள்ளுமாறு வற்புறுத்தப்பட்டுள்ளது.

காளைகள் நீக்கம்
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்தால் பழக்கப்பட்ட விலங்கினை காட்சிப்படுத்துவது என்ற பிரிவிலிருந்து காளைகளை உடனடியாக நீக்கி அறிவிக்கை வெளியிடக் கோரி தமிழக அரசின் உயர் அதிகாரிகள் வரும் 12.1.2015 அன்று மீண்டும் டெல்லி சென்று மத்திய அரசின் உயர் அதிகாரிகளை சந்தித்து வற்புறுத்துவார்கள். இந்த அறிவிக்கையை மத்திய அரசு உடன் வெளியிடும் என நான் நம்புகிறேன்.

புதிய அறிக்கை
அவ்வாறான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டு விட்டால், உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எந்தவித ஊறும் இல்லாத வகையில், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஒரு புதிய அறிவிக்கையை தமிழக அரசு வெளியிட வழிவகை ஏற்படும்.

தமிழக அரசு உறுதி
மத்திய அரசு அறிவிக்கையை வெளியிட்ட உடனேயே, இதற்கான நடவடிக்கையை உடன் எடுத்து, தமிழர்களின் பராம்பரிய ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை உடன் நடத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு எடுக்கும் என உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications