ராஜபக்சே விவகாரம்- தமிழகத்தில் கொந்தளிப்பை உருவாக்க சிலர் சதி: பொன்னார் புகார்!
நாகர்கோவில்: மோடி பதவியேற்பு விழாவில் ராஜபக்சே பங்கேற்பதை முன்வைத்து தமிழ்நாட்டில் கொந்தளிப்பை உருவாக்க சிலர் திட்டமிட்டு முயற்சி செய்து வருகின்றனர் என்று தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற பாஜக எம்.பிக்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் முதல் முறையாக நேற்று நாகர்கோவில் வந்தார் பொன். ராதாகிருஷ்ணன். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது செய்தியாளர்களிடம் பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
தமிழ்நாட்டில் கொந்தளிப்பை உருவாக்க திட்டமிட்டு சிலர் முயற்சி செய்து வருகிறார்கள். கடந்த கால காங்கிரஸ் ஆட்சி இலங்கை தமிழ் மக்களுக்கு துரோகம் செய்தது. இலங்கை நாட்டு அதிபர் ராஜபக்சேவுக்கு துணையாக நின்று தமிழர்களை கொன்ற கட்சி காங்கிரஸ் கட்சி.
மோடி அரசு இலங்கை தமிழர்களை, தமிழ் மீனவர்களை காக்கும் அரசு. ஆரம்பத்திலேயே இந்த அரசை களங்கப்படுத்த நினைத்து சிலர் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார்கள். சதி செயலுக்கு தமிழ் சமுதாயம் இரையாக கூடாது. வர இருக்கும் அரசுக்கு கெட்டபெயரை உருவாக்க உணர்வுகளை தூண்டி விட்டு குளிர்காயும் அரசியல் கட்சிகளுக்கு தமிழக மக்கள் ஆதரவு தரக்கூடாது.
இலங்கை தமிழர், மீனவர் பிரச்சினை இன்னும் 6 மாதத்தில் இருந்து ஒரு ஆண்டு காலத்திற்குள் முற்றிலுமாக தீர்க்கப்படும்.
தமிழ்நாட்டில் தமிழர்களை பிரித்து ஆளும் சூழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த கால ஆட்சியை விட மோடி அரசு நல்லதுதான் செய்யும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, ஏற்கனவே தெரிவித்து உள்ளார்.
காங்கிரஸ் செய்த துரோகத்தை இந்த அரசு செய்யாது என்று அவருக்கு தெரியும். தமிழக முதல்வர் ஜெயலலிதா தமிழர்கள் நலன் கருதி, தமிழ்நாட்டின் நலன் கருதி நரேந்திரமோடி பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டும்.












Click it and Unblock the Notifications