டெல்லி ஆப்படிக்கிறதா?: அரசியலை விட்டுவிட்டால் விவசாயம் பார்ப்பேன்- அண்ணாமலை திடீர் பேட்டி!
அன்னூர்: அரசியலை விட்டுவிட்டால் தாம் விவசாயம் பார்க்கப் போய்விடுவேன் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் நெடுங்குன்றம் ரவுடி சூர்யா, பாஜகவில் இணைந்து கட்சியின் பட்டியல் அணி மாநில செயலாளர் பதவி பெற்றது தமக்கு தெரியாது எனவும் அண்ணாமலை கூறியுள்ளார்.
கோவை அன்னூரில் இன்று செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: நெடுங்குன்றம் ரவுடி சூர்யா, பாஜகவில் இணைந்தது தெரியாது. கடந்த காலங்களில் தவறு செய்தவர்கள் பாஜகவில் இணைந்து திருந்தி வாழ நினைக்கலாம். அவர்களுக்கு பாஜக ஒரு வாய்ப்பு கொடுத்ததாக இதை பார்க்கிறேன். ஒரு நல்ல பாரதத்தை படைக்க பாஜகவை சூர்யா பயன்படுத்திக் கொள்ளட்டும். ஆனால் பாஜகவின் பெயரை வைத்துக் கொண்டு தவறு செய்தால் அவர்களை அனுமதிக்க முடியாது.

டெல்லி தலைமையிடம் கூட்டணி தொடர்பாக உரிய நேரத்தில் பேசுவேன். ஒரு கருத்துக்கு எதிர் கருத்து தெரிவித்தால் அது எங்கே போய் முடியும் என்பது தெரியாது. அரசியலை விட்டுவிட்டால் நான் தோட்ட வேலைக்கு, விவசாயம் பார்க்க சென்றுவிடுவேன். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
தமிழ்நாட்டில் பாஜக எப்படியாவது சில தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது. இதற்காகவே அதிமுகவை இறுகப் பிடித்து கொண்டு இருந்தது. ஆனால் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இடைவிடாமல் அதிமுகவை சீண்டினார். இதனால் பாஜகவுடனான கூட்டணியை திட்டவட்டமாக முறித்துக் கொண்டது. இதனால் டெல்லி பாஜக கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.
அண்ணா திமுகவை சமாதானப்படுத்த டெல்லி பாஜக தலைமை தொடர்ந்து முயற்சித்து வருகிறது. ஆனால் அண்ணா திமுகவோ, எடப்பாடி பழனிசாமிதான் 2026 சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளர்; தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை இருக்கக் கூடாது என்கிற நிபந்தனைகளில் உறுதியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அண்ணாமலையை உடனே டெல்லி தலைமை வர சொல்லி உத்தரவிட்டுள்ளது. இதனால் அண்ணாமலை டெல்லி செல்ல உள்ளார். அதற்கு முன்னதாக அன்னூரில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, அரசியலை விட்டுவிட்டால் விவசாயம் பார்க்கப் போவேன் என பேசியிருப்பதுதான் குறிப்பிடத்தக்கது.
முன்னதாக பிரதமர் மோடியின் முன்னெடுப்பான, தூய்மையே சேவை - மூலம், கோவை அக்ரஹார சாமக்குளத்தில் நடைபெற்ற தூய்மைப் பணியில் பங்கேற்றதில் மகிழ்ச்சி. கடந்த நான்கு வருடங்களாக இந்த ஏரியில் புனரமைப்பு பணிகளைச் செய்து வரும் அக்ரஹார சாமக்குளம் ஏரி பாதுகாப்பு அமைப்புக்கு, தமிழ்நாடு பாஜக சார்பாக நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார் அண்ணாமலை.












Click it and Unblock the Notifications