காவிரி மேலாண்மை வாரிய காலக்கெடு முடிந்தது... 'கப்சிப்' ஆன தமிழக பாஜக!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசின் செயலுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தமிழக பாஜகவினர் சைலன்ட் மோடிற்கு போய்விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை : காவிரி மேலாண்மை வாரியத்தை கடைசி வரை அமைக்காமலே தமிழக மக்களுக்கு மத்திய பாஜக அரசு பட்டை நாமம் போட்டுவிட்டது. மத்திய அரசு தந்த இந்த ஏமாற்றத்தால் அடுத்து தமிழக அரசு என்ன செய்யப்போகிறது என்பது ஒருபக்கம் இருந்தாலும், எதற்கெடுத்தாலும் மத்திய அரசின் செயலை நியாயப்படுத்தும் தமிழக பாஜகவினர் எங்கப்பா என்று பார்த்தால் அவர்கள் எல்லாம் தமிழக மக்களுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் கப்சிப் சைலன்ட் மோடிற்கு போயுள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் இந்த முறையாவது அமைக்கப்படும் என்று எதிர்பார்த்து காத்திருந்த தமிழக விவசாயிகளுக்கு வழக்கம் போல இந்த முறையும் ஏமாற்றமே கிடைத்திருக்கிறது. இதனால் கொந்தளிப்பில் உள்ளனர் தமிழக மக்களும் விவசாயிகளும்.
மத்திய அரசின் போக்கை கண்டித்து தமிழக அரசியல் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பலைகளை எழுப்பி வருகின்றனர். அதிமுக எம்பிகள் கூண்டோடு ராஜினாமா செய்ய வேண்டும், மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று அரசியல் கட்சியினர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

இறுதி முடிவை முதல்வர் அறிவிப்பார்
தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உள்ளதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழக அரசின் முடிவு என்ன என்று இதுவரை தெரியவில்லை இந்த விவகாரத்தில் இறுதி முடிவை தமிழக முதல்வர் அறிவிப்பார் என்று அமைச்சர்கள் அனைவரும் ஒட்டுமொத்த குரலில் கூறி வருகின்றனர்.

பின்வாங்கும் பாஜகவினர்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது தான் இன்றைய செய்தி ஊடகத்தின் பரபரப்பு. இதற்கான விவாதங்கள் அனல்பறக்கின்றன இந்த விவாதத்திற்கு கட்சி சார்பில் ஆட்களை பிடிக்க ஆளாய் பறக்கின்றன. திமுக, அதிமுக, விவசாயிகள் சங்கம் என விவாதத்திற்கு ஆட்கள் கிடைத்தாலும் பாஜக சார்பில் முந்திக்கொண்டு விவாதத்தில் பங்கேற்பவர்கள் அனைவருமே பின்வாங்கி ஓடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கப்சிப்பான தமிழக பாஜக தலைவர்கள்
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான கெடு 5 மணியுடன் முடிந்த நிலையில் இது குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கருத்து தெரிவிக்கவே இல்லை. எப்போதும் ட்விட்டரில் கருத்து பதிவிடும் எச். ராஜாவும் இந்த விஷயத்திலும் கப்சிப் தான். கடந்த 3 நாட்களாகவே எச். ராஜாவின் சமூக வலைதள பக்கங்கள் கருத்துகள் இல்லாமல் காத்து வாங்குகின்றன. வீண் ட்வீட்டுகளை போட்டு வம்பிழுப்பவர் காவிரி பற்றி ஏன் வாய்திறக்கவில்லை.

நழுவி ஓடும் பாஜகவினர்
தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் ராகவன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோரின் செல்போன்களும் சைலன்ட் மோடிற்கு போய்விட்டதாக கூறப்படுகிறது. ஊடக விவாதங்களில் பங்கேற்பதை தவிர்க்க சிலர் ஊரில் இல்லை, சொந்த வேலை இருக்கிறது உள்ளிட்டவற்றை காரணமாக சொல்லி வருவதாகத் தெரிகிறது.

சீனியர் தலைவர்கள் எங்கே?
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்ற நம்பிக்கை இருப்பதாக சொன்ன இல. கணேசன், மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட யாருமே இதுவரை இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்கவில்லை. மத்திய அரசுடன் நேரடி தொடர்பில் உள்ளவர்களான இவர்களே இப்படி செயல்பட்டால் எப்படி?












Click it and Unblock the Notifications