18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வருமா?... தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லகானி பரபர! #Exclusive
18 தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகே முடிவு செய்யப்படும் என்று தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லகானி தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை : 18 தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து நீதிமன்ற தடை இருப்பதால் தற்போதைக்கு எந்த முடிவும் எடுக்கப்படாது என்றும், நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகே இந்த தொகுதிகளுக்கு தேர்தல் நடத்துவது பற்றி முடிவு செய்யப்படும் என்றும் தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லகானி கூறியுள்ளார்.
முதல்வர் பதவியில் இருந்து பழனிசாமியை நீக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் ஆளுநரிடம் மனு அளித்தனர். அதிமுக கட்சி விதிகளுக்கு எதிராக செயல்பட்ட 19 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தக் கட்சியின் கொறடா ராஜேந்திரன் சபாநாயகர் தனபாலிடம் மனு அளித்தார்.
இதன் அடிப்படையில் 19 எம்எல்ஏக்களும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் கம்பம் தொகுதி எம்எல்ஏ ஐக்கையன் முதல்வர் அணிக்குத் தாவிவிட எஞ்சிய 18 எம்எல்ஏக்கள் நேரில் விளக்கம் அளிக்கவில்லை என்று காரணம் காட்டி அவர்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

18 எம்எல்ஏக்கள் வழக்கு
அதோடு இந்த 18 தொகுதிகளும் காலியானதாக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தகுதி நீக்கத்தை எதிர்த்து 18 எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கான சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் ஜனவரி 9ம் தேதி இறுதித் தீர்ப்பு வரும் என்று தெரிகிறது.

காலித் தொகுதிகள் 18 ஆனதாக அறிவிப்பு
இதனிடையே ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு தினகரன் வெற்றி பெற்ற நிலையில் அரசின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் தினகரன் சுயேச்சை எம்எல்ஏவாக பொறுப்பேற்றதால் காலியான தொகுதிகளின் எண்ணிக்கை 19ல் இருந்து 18 ஆக குறைந்துள்ளதாக அதில் சேர்க்கப்பட்டுள்ளது.

நடக்குமா இடைத்தேர்தல்
அரசு 18 தொகுதிகள் காலி என்று தொடர்ந்து அறிவித்து வரும் நிலையில், தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடு இந்த விவகாரத்தில் என்ன என்று தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லகானியிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் கூறியதாவது: அவர்கள் தகுதி நீக்கம் செய்ததன் அடிப்படையில் அரசின் இணையதளத்தில் தொகுதிகள் காலி என்று பதிவேற்றம் செய்திருக்கலாம்.

நீதிமன்ற தீர்ப்பை பொறுத்தே
ஆனால் இந்த 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக் கூடாது என்று நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் 18 தொகுதிகள் குறித்து எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை, நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகே அது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications