உள்ளாட்சித் தேர்தல்- அமைச்சரவைக் கூட்டத்தில் 'கோவை' அமைச்சர்களுக்கு செம டோஸ் விட்ட ஜெ.!!
சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் கோவையில் பாரதிய ஜனதா கட்சி கட்சி வேட்பாளர் டெபாசிட் வாங்கியதால் அந்த மாநகராட்சிக்கு பொறுப்பான அமைச்சர்களுக்கு இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா செம டோஸ் விட்டதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று நண்பகல் தலைமைச் செயலகத்தில் கூடியது. சுமார் 3 மணி நேரம் இன்றைய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

அமைச்சர்களுக்கு டோஸ்
இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முதலில் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் குறித்து விவாதிக்கப்பட்டிருக்கிறது. அப்போது கோவை மாநகராட்சி தேர்தலில் பாஜக டெபாசிட் வாங்கியதால் அதற்கு பொறுப்பான அமைச்சர்களை ஜெயலலிதா கடுமையாக திட்டி தீர்த்துவிட்டாராம்.

சகாயம் குழு
அதன் பின்னர் கிரானைட், மணல் கொள்ளை குறித்த சகாயம் குழுவுக்கு உச்சநீதிமன்றமும் அனுமதி அளித்துவிட்ட நிலையில் அதை எப்படி எதிர்கொள்வது என்றும் விவாதிக்கப்பட்டது.

சொத்துக் குவிப்பு வழக்கு
இதனைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா மீதான பெங்களூர் சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு 27-ந் தேதி வர இருக்கிறது. இது குறித்தும் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.

கோப்புகள் 'கிளியரன்ஸ்'
இந்தத் தீர்ப்பு தமக்கு எதிராக வரவும் கூடும் என்பதால் நிலுவையில் முக்கிய திட்டங்கள், சட்டசபையில் 110வது விதியின் கீழ் அறிவித்த திட்டங்கள் என தேங்கிக் கிடந்த கோப்புகளுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டிருக்கிறது.

கிளம்பிய ராஜினாமா பரபரப்பு
முன்னதாக சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பையொட்டி இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவில் முதல்வர் தமது பதவியை ராஜினாமா செய்வார் என்றும் அப்படிச் செய்வதன் மூலம் ஒரு முன்னுதாரணத்தை உருவாக்கலாம்..அதன் மூலம் தனக்கு ஆதரவு அதிகரிக்கும் என்றும் ஜெயலலிதா கருதுவதாகவும் தகவல்கள் வெளியாகின.

நல்ல நாள்...
அதுவும் இன்று மகாளய அமாவாசை.. நல்ல நாள் என்பதால் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின்னர் முதல்வர் ஜெயலலிதா ராஜினாமா செய்வார் என்று சில மலையாள பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டிருந்தன. அத்துடன் இடைக்கால முதல்வர் ஒருவரை இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் தேர்ந்தெடுக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டது.

பரபரப்புக்கு முற்றுப்புள்ளி
ஆனால் அமைச்சரவைக் கூட்டம் முடிவடைந்த பின்னர் தலைமைச் செயலகத்தில் கட்டிடங்கள், குடிநீர் திட்டங்களை காணொலிக் காட்சிகள் மூலம் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். இதனால் முதல்வர் ராஜினாமா செய்யக் கூடும் என்ற பரபரப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications