பாலாற்றின் குறுக்கே தடுப்பணையின் உயரத்தை அதிகரிக்கக் கூடாது - ஆந்திர முதல்வருக்கு ஜெ.கடிதம்
சென்னை: பாலாற்றின் குறுக்கே தடுப்பணை உயரத்தை அதிகரிக்கக் கூடாது என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுக்கு, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இன்று கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பள்ளம் கிராமத்தில் பாலாறுக்கு குறுக்கே உள்ள தடுப்பணையின் உயரத்தை 5 அடிடியல் இருந்து 12 அடியாக உயர்த்தப்பட்டிருப்பது, தமிழகத்துக்கு மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும்.

ஏற்கனவே பாலாறு ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்திருப்பது உங்களுக்கு நன்கு தெரிந்த விஷயம்தான். அதில் இருந்து வரும் தண்ணீர் மூலமாகத்தான் தமிழகத்தில் 4.20 லட்சம் ஏக்கர் சாகுபடி செய்யப்படுகிறது.
தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களில் பாலாறு தண்ணீர்தான் குடிநீரின் தேவைக்காக நம்பியிருக்கும் ஒரேயொரு நீராதாரமாகும். கல்பாக்கம் அணு மின் நிலையத்துக்கும் பாலாறு தண்ணீரே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
எனவே, பெரும்பள்ளம் கிராமத்தில் தடுப்பணையின் உயரத்தை அதிகரிக்கக் கூடாது. அவ்வாறு தடுப்பணை உயரத்தை உயர்த்துதல் 1892ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறும் செயலாகும். தடுப்பணையின் நீர்மட்டத்தை குறைக்கவும் ஆந்திர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாலாறு ஆற்றின் குறுக்கே எந்த விதமான கட்டுமானப் பணிகளையும் ஆந்திர மாநில அரசு மேற்கொள்ளக் கூடாது என்று உத்தரவிடக் கோரி 2006ல் தமிழகம் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், பெரும்பள்ளம் கிராமத்தில் தடுப்பணையின் உயரத்தை அதிகரித்திருப்பதற்கு தமிழக அரசின் சார்பில் கடுமையான கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. இது 1892ம் ஆண்டு மெட்ரா-மைசூரு இடையேயான ஒப்பந்தத்தை மீறும் செயலாகும்.
எனவே, தாங்கள் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு, தடுப்பணையின் உயரத்தைக் குறைக்கவும், வழக்கமான அளவு நீரை தேக்கி, கூடுதலாக தேக்கப்பட்ட நீர்மட்டத்தைக் குறைக்கவும் உத்தரவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications