ஜெ. உயிலும், பணமும் பறிபோனதா? கொடநாட்டில் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள்.. சட்டசபையில் முதல்வர் பதில்
கொடநாடு பங்களாவில் இருந்து கைக்கடிகாரங்கள் மட்டுமே கொள்ளையடிக்கப்பட்டது என முதல்வர் சட்டசபையில் விளக்கம்
சென்னை : கொடநாடு பங்களாவில் வாட்ச், அலங்காரப் பொருட்கள் தவிர வேறு எதுவும் கொள்ளையடிக்கப்படவில்லை என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் ஜெயலலிதாவின் ஆடம்பர கொடநாடு பங்களாவில் கொள்ளை போன பொருட்கள் குறித்து முதல்வர் பழனிசாமி சட்டசபையில் அறிவித்துள்ளார். ஜெயலலிதா இருந்த காலத்தில் அவர் அடிக்கடி சென்று ஓய்வு எடுக்கும் தேயிலைத் தோட்டங்கள் சூழ்ந்த இந்த பங்களாவில் வெளியாட்கள் யாரும் அவ்வளவு எளிதில் நுழைந்து விட முடியாது.

ஆனால் டிசம்பர் மாதம் ஜெயலலிதா மரணமடைந்த நிலையில், சசிகலாவும் சிறை சென்றதால் ஜெயலலிதாவின் சொத்துக்கள் அனைத்தும் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்ற கேள்வி எழுந்தது. அதிலும் குறிப்பாக கொடநாடு பங்களா யார் கையில் இருக்கிறது என்ற கேள்வி அனைவருக்குமே எழுந்தது. இந்நிலையில் பங்களாவில் நடத்தப்பட்ட கொள்ளை சம்பவம் அதனை தடுக்க முற்பட்டபோது காவலாளி ஒருவர் உயிரிழந்தது என்று தொடர் மர்மங்கள் அரங்கேறின.
ஜெயலலிதாவின் உயில் தேடி சென்ற கூலிப்படை என்றும் மாவோயிஸ்டுகளின் கொள்ளைத் திட்டம் என்று பரவலாக பல செய்திகள் கிளம்பின. இந்நிலையில் கொள்ளை தொடர்பான 7 பேர் கைது செய்யப்பட்டனர். கோடநாடு பங்களாவில் என்னென்ன பொருட்கள் இருந்தது என்று சசிகலாவிற்கு மட்டுமே தெரியும் என்று அனைவரும் கூறி வந்தனர்.
இந்நிலையில் சட்டசபையில் இன்று திமுக உறுப்பினரின் கேள்விக்கு பதிலளித்து பேசிய முதல்வர் பழனிசாமி கொடநாடு பங்களாவில் இருந்து கைக்கடிகாரங்களும், அலங்காரப் பொருட்களும் மட்டுமே கொள்ளையடிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications