நலத் திட்டங்களுக்கான நிதியை குறைத்த மத்திய அரசு: முதல்வர் ஓ.பி.எஸ். சாடல்
சென்னை: மத்திய அரசு 24 நலத்திட்டங்களுக்கான நிதியை குறைத்துள்ளது;14வது நிதி ஆணையத்தின் பரிந்துரையால் தமிழகத்துக்கு ரூ1,137 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என தமிழக சட்டசபையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சாடியுள்ளார்.
சட்டசபையில் 2015-16 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று முதல்வர்: ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து பேசியதாவது:
மத்திய அரசிடம் இருந்து அதிக நிதி பெற முடியும் என்ற நம்பிக்கை தகர்ந்துவிட்டது. மத்திய அரசு மூலம் செயல்படுத்தப்படும் 24 திட்டங்களுக்கு நிதி குறைக்கப்பட்டுள்ளன.
14வது நிதி ஆணையம் தமிழகத்துக்கு பெரும் அநீதியை இழைத்து விட்டது. மத்திய அரசின் பல்வேறு நிதி உதவிகள் வருங்காலங்களில் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு கிடைத்து வந்த பங்கு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ரூ.1,137 கோடி வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது
2015 - 2016ம் ஆண்டில் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நிதி ரூபாய் 21,116 கோடி குறைக்கப்பட்டுள்ளது. அனைத்துவிதமான மறைமுக வரிவருவாயை மாநிலங்களுக்கே வழங்க வேண்டிய காலம் கனிந்துவிட்டது.
இவ்வாறு முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பேசினார்.