தமிழகத்தில் பாஜகவிற்கு ரஜினியை விட்டால் வேற நாதியில்லையா?.. திருநாவுக்கரசர் விளாசல்!
நடிகர் ரஜினிகாந்தை பாஜகவில் சேருமாறு அந்தக் கட்சியின் தேசியத் தலைவரே அழைப்பு விடுப்பது ஏன் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதற்கு முன்பே அழைப்பு விடுக்கும் அளவிற்கு பாஜக பலவீனமாக உள்ளதா என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் மாபெரும் கருத்து யுத்தத்தையே நடத்தி வருகின்றன. திமுக, தேமுதிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ரஜினி அரசியலுக்கு வந்தால் மகிழ்ச்சி என்றும், தங்களது கட்சிக்கு வர விரும்பினால் வரவேற்பதாகவும் கூறி வருகின்றனர்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசும் போது, நடிகர் ரஜினிகாந்த்திற்கு தங்களைப்போல் கடவுள் நம்பிக்கை இருப்பதாகவும், பாஜகவின் கருத்தோடு ஒத்துப்போகக் கூடியவர் என்பதாலும், அவர் பாஜகவுடன் கூட்டணி வைப்பாரா என்று பொருத்திருந்து பார்ப்போம் என்றார்.

பலவீனமாக உள்ளதா பாஜக
இந்நிலையில் தமிழிசையின் கருத்து குறித்து சென்னையில் பேட்டியளித்த தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர், "கட்சி தொடங்குவதற்கு முன்பே ரஜினிகாந்தை அழைக்கும் அளவுக்கு தமிழகத்தில் பாஜக பலவீனமாக உள்ளதா என்று கேள்வி எழுப்பியுள்ளார். ரஜினி தன்னுடைய சிறந்த நண்பர் என்றும் அவர் சிந்தித்து செயல்படுவார் என்றும் அவர் கூறினார்.

பதறும பாஜக
நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதற்கு முன்பே, அவரை தன் கட்சியில் சேர்த்துவிட வேண்டும் என்று பாஜகவின் தேசிய தலைவரே வெளிப்படையாக அழைப்புவிடுக்கிறார். பாஜகவின் இந்த பதற்றம் தமிழகத்தில் அந்த கட்சி எந்த அளவிற்கு பலகீனமாக உள்ளது என்பதை எடுத்துக் காட்டுகிறது என்றார்.

தோல்வியை ஒத்துகொள்கிறார்களா?
ரஜினியை தன் கட்சியில் சேர்த்த பிறகுதான், தமிழகத்தில் பாஜகவை வளர்க்க முடியும் என்பதை, அவர்களே ஒத்து கொள்வது போலத் தான் உள்ளது இந்த செயல்பாடு. நாடு முழுவதும் பரந்து விரிந்துள்ள கட்சி என்று சொல்லும் பாஜக ரஜினிக்காக தவமாய் காத்திருப்பது ஏன் என்பதும் திருநாவுக்கரசரின் கேள்வி.

தனி பாணியில் செயல்படுவார்
ரஜினிகாந்த் கட்சி தொடங்க முன்வந்தால் அதனை வரவேற்கிறேன். ரஜினி அரசியலுக்கு வந்தால் தனக்கான பாணியில், யாருடனும் கூட்டணி வைக்காமல், தனியாக செயல்படுவார் என்றே நம்புவதாகவும் திருநாவுக்கரசர் கூறினார்.












Click it and Unblock the Notifications